மகாராஷ்டிராவில் 50 லட்சம் பேர் 2 டோஸ்களை போட்டுள்ளனர்.. சுகாதாரத் துறை தகவல்!
மும்பை: மகாராஷ்டிராவில் 50 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே கொரோனா இரண்டாவது அலையில் மிக மோசமாக சிக்கி சின்னாபின்னமான முதல் மாநிலம் மகாராஷ்டிரா ஆகும். ஆனாலும் கொரோனாவை வென்று சாதித்து காட்டியது மகாராஷ்டிரா.
ஒரு கட்டத்தில் 60,000-க்கும் மேல் தினசரி பாதிப்பு சென்ற நிலையில் தற்போது 7,000-க்கும் குறைவாகவே பாதிப்புக்கள் உள்ளன.இந்த நிலையில் மகாராஷ்டிராவில் 50 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுள்ளதாக சூப்பர் தகவல் வந்துள்ளது.
மொத்தம் 53,72,219 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை கூறியுள்ளது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களில், 34,99,679 பேர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள். 8,47,938 பேர் முன்கள பணியாளர்கள், 8,05,318 பேர் சுகாதாரப் பணியாளர்கள், 2,19,284 பேர் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று சுகாதாரத் துறை தரவுகள் கூறுகின்றன.
45 வயதிற்கு மேற்பட்டவர்களைச் சேர்ந்த மொத்தம் 1,55,11,585 பேர் முதல் டோஸ் பெற்றுள்ளனர். அதே வேளையில் 12,38,085 சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல் டோஸ் கிடைத்துள்ளது. 20,20,542 முன்கள பணியாளர்களும், 45 வயதிற்குட்பட்டவர்களில் 27,81,117 பேரும் முதல் டோஸ் பெற்றுள்ளனர் என்று சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.