மருத்துவமனையில் பெரும் தீ.. வேகமாக பல மாடிகள் ஏறி மக்களை மீட்ட ஸ்விக்கி பாய்.. மும்பை ஹீரோ
மும்பையில் கடந்த திங்கள்கிழமை நடந்த தீ விபத்தில் ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவர் பல மக்களின் உயிரை காப்பாற்றிய நிகழ்வு பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
மும்பை: மும்பையில் கடந்த திங்கள்கிழமை நடந்த தீ விபத்தில் ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவர் பல மக்களின் உயிரை காப்பாற்றிய நிகழ்வு பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
கடந்த திங்கள் கிழமை மும்பையின் அந்தேரி பகுதியில் மருத்துவமனை ஒன்றில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. காம்நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் பலியானார்கள். 150 பேர் காயம் அடைந்தனர். மின்சார கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஸ்விக்கி டெலிவரி பாய்
இந்த விபத்து நடந்த போது அந்த பகுதிக்கு சாப்பாடு டெலிவரி செய்ய சென்றவர்தான் ஸ்விக்கி நிறுவனத்தின் டெலிவரி பாயாக வேலை செய்யும் சித்து ஹியுமனாபேட். மருத்துவமனையில் தீ எரிவதை பார்த்த சித்து வேகமாக பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு தீயணைப்பு வீரர்களுடன் மீட்பு பணியில் களமிறங்கினார். முகத்தில் ஒரு கர்சீப் துணியை கட்டிக்கொண்டு அவர் தீயணைப்பு வீரர்களுடன் மீட்பு பணியில் ஈடுபட்டார்.
செம
மருத்துவமனை கட்டிடத்திற்கு வெளிப்புறமாக வேகமாக ஏறி நான்காவது மாடி, ஐந்தாவது மாடியில் சிக்கி இருப்பவர்களை மீட்டார். கையில் கல் ஒன்றை எடுத்து சென்று, ஜன்னலை உடைத்து மக்களை அது வழியாக வெளியே கொண்டு வந்து பின் தீயணைப்பு வீரர்களிடம் அளித்தார். நாள் முழுக்க அவர் அன்று மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார்.
எத்தனை பேர்
மொத்தம் இவர் 20 பேருக்கும் அதிகமானோரை உயிரோடு மீட்டு இருக்கிறார். அதில் சிலர் மிகவும் வயதானவர்கள் என்று கூறப்படுகிறது. காப்பாற்றப்பட்ட அனைவரும் நல்ல உடல்நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சிகிச்சை
தற்போது இவர் சுவாச பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மக்களை காப்பாற்றும் போது இவர் மூக்கில் அதிகப்படியான புகை சென்று சுவாச பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இவர் மாட்டியிருந்த கர்சீப் மக்களை காப்பாற்றும் போதே எங்கேயோ விழுந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹெல்மெட் எங்கே
அதேபோல் இவர் நிறுத்தியிருந்த வண்டியின் ஹெல்மெட்டை யாரோ திருடிவிட்டனர் என்றும் இவர் கூறியுள்ளார். கீழே வாகனத்தை நிறுத்திவிட்டு மக்களுக்கு உதவி செய்துகொண்டு கொண்டு இருந்த போது யாரோ இவருடைய ஹெல்மெட்டை திருடிவிட்டதாக கூறப்படுகிறது.