ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் வழக்கில் திருப்பம்: முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டவர் மோசடி பேர்வழியாம்
மும்பை: நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தினம் தினம் புது புது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து, கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகவும், எனவே, அந்த கப்பலில் சாதாரணப் பயணிகளை போல சென்று கண்காணித்த போது, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்ததாகவும், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
8 பேரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

ஷாருக் கான் மகன்
இதில் ஒருவர் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் ஆகும். எனவே இந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரம், பாரதிய ஜனதா கட்சியால் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பான நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ (என்.சி.பி) தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மஹாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

பாஜக பிரமுகர்
மும்பை கடற்கரையோரம் சொகுசுக் கப்பலில் கைது செய்யப்பட்டவர்கள், நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்படும் வீடியோவில், ஆர்யன் கானுடன் அலுவலகத்துக்குள் ஒரு தனியார் டிடெக்டிவ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மணீஷ் பானுஷாலி செல்கிறார்கள். தனியார் டிடெக்டிவ் பெயர் கிரண் கோசாவி, என்று நவாப் மாலிக் குற்றம்சாட்டியிருந்தார்.
Recommended Video

நவாப் மாலிக் குற்றச்சாட்டு
சொகுசுக் கப்பலிலோ, துறைமுகத்தின் கப்பல் முனையத்திலோ போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை. என்.சி.பி வெளியிட்டுள்ள காணொளி, அந்த அமைப்பின் மண்டல அலுவலகத்தில் எடுக்கப்பட்டது. எனவே கப்பலில் போதை மருந்து கைப்பற்றப்பட்டதாக கூறுவது நாடகம் என்றும் நவாப் மாலிக் கூறியிருந்தார். அதேநேரம், வழக்கில் சாட்சிகளாக அவர்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் அலுவலகத்திற்கு வந்து சென்றார்கள் என்று போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

மோசடி பேர்வழி
இந்த நிலையில், வழக்கில் புதிதாக ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனியார் டிடெக்டிவ் என்று அடையாளம் காட்டப்பட்ட கோசாவி, ஏற்கனவே பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி என்று தகவல் வெளியாகியுள்ளது. 2018ம் ஆண்டு, புனே நகர காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில் கோஸ்வாமி தேடப்படும் குற்றவாளியாகும். புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா மோசடி வழக்கு தொடர்பாக கோசாவி தேடப்படுவதை உறுதி செய்துள்ளார்.

பல காவல் நிலையங்களில் புகார்
மும்பையில் அந்தேரி காவல் நிலையத்தில் 2007ம் ஆண்டு, ஒன்று 2015 மற்றும் 2016ல் தானே கபூர்பவடி காவல் நிலையத்தில், மற்றும் புனேவில் உள்ள ஃபராஸ்கானா காவல் நிலையங்கள் ஆகியவற்றிலும் கோசாவிக்கு எதிராக மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கோசாவி ஹோட்டல் மேனேஜ்மென்ட் வேலை பற்றிய விளம்பரத்தை சமூக ஊடக தளங்களில் வெளியிட்டு மோசடி செய்த தகவலும் வெளியாகியுள்ளது. மலேசியாவில் தேஷ்முக் என்பவருக்கு வேலை தருவதாக உறுதியளித்தது, கோசாவி இரு தவணைகளில் ரூ. 3.09 லட்சத்தை வங்கி கணக்கில் பெற்றுள்ளார். ஆனால் வேலை வாய்ப்பு குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. தேஷ்முக் புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 419 மற்றும் 420 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் கோசாவிக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றச்சாட்டுக்கு வலு
மோசடி செய்யும் நபரை இந்த வழக்கின் சாட்சியமாக சேர்த்துள்ளது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. ஆர்யன் கான் தொடர்பான வழக்கில் தினம் தினம் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. நேற்று அவரது ஜாமீன் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications