மதத்தின் பெயரில் நாட்டை பின்னோக்கி நகர்த்த முயற்சி! சரத் பவார் கடும் பேச்சு
மும்பை: ‛‛ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பசி, வேலை தொடர்பான அடிப்படை பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைதிருப்பும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடுகின்றனர்'' என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறினார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகின்றன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.
இந்நிலையில் தான் மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின்(எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இல்லாவிட்டால் கடும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் தான் மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்தும் விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பேசியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் முயற்சி நடக்கிறது. இதனை நாம் நேரிடையாக பார்த்து வருகிறோம். இன்றைய மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் என்ன?. விலைவாசி உயர்வு, உணவு தானியம் பற்றாக்குறை, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவை பிரச்சனைகளாக உள்ளன. இதில் கவனம் செலுத்தி பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். ஆனால் இதை யாரும் கவனிக்கவில்லை.
எம்என்எஸ் அமைப்பினர் கோரிக்கையை நிறைவேற்றினால் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமா. சிலர் அடிப்படை பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பி தங்களுக்கான விளம்பரத்தை தேடி கொள்கின்றனர்'' என்றார்.