மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி...அடுத்த ஆட்டத்தை துவக்கிய பாஜக
மும்பை : அடுத்த 15 நாட்களுக்குள் 2 மகாராஷ்டிர அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த இதுவே சரியான நேரம் எனவும் மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பட்டேல் கோரிக்கை வைத்துள்ளார்.
சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சச்சின் வேஸ் என்பவர், முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது கடிதத்தில், தான் மும்பை போலீசாக பணியை தொடர ரூ.2 கோடி லஞ்சம் தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மற்றொரு அமைச்சரான அனில் பரப், ஒப்பந்தக்காரர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்தது.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்ததை அடுத்து, இந்த லஞ்ச புகார்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால் உள்துறை அமைச்சர் பதவியை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அனில் தேஷ்முக் ராஜினாமா செய்தார். ஆனால் சிவசேனா கட்சியை சேர்ந்த அனில் பரப் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தார். இது வெறும் அனுமானத்தில் கூறப்படும் குற்றச்சாட்டு என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ராஜினாமா செய்யணும்
இந்நிலையில் மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பட்டேல், அடுத்த 15 நாட்களில் இரு அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்வார்கள். இந்த அமைச்சர்களுக்கு எதிராக சிலர் கோர்ட்டிற்கு செல்வார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் ராஜினாமா செய்வார்கள் என்றார். இருந்தும் யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்கு பிறகு நிரூபிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற பட்டேல், மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது சரியானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். ஆனால் பாஜக சார்பில் இந்த கோரிக்கை வைக்கப்படவில்லை எனவும், இது பட்டேலின் தனிப்பட்ட கருத்து எனவும் கூறப்படுகிறது.
ஜனாதிபதி ஆட்சி தான் வழி
தொடர்ந்து அவர் பேசுகையில், மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது. ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதை தவிர வேறு ஏதாவது வழி உள்ளதா என நிபுணர்கள் விளக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும், அனைத்திற்கும் நீங்கள் மத்திய அரசை தான் குறை கூறுவீர்கள் என்றால், ஆட்சி நிர்வாகத்தை மத்திய அரசிடமே ஒப்படைத்தால் என்ன எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
எதற்காக சுப்ரீம் கோர்ட் செல்லணும்
தன் மீதான ஊரல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க அனில் தேஷ்முக், மும்பை ஐகோர்ட் பிறப்பித்த சிபிஐ விசாரணை உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்றுள்ளார். ராஜினாமா கடிதத்தில் நேர்மையாக, வெளிப்படையாக பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ள அவர், சுப்ரீம் கோர்ட்டிற்கு எதற்காக செல்ல வேண்டும். மகாராஷ்டிர அரசு ஒரு கட்டமைக்கப்பட்ட கிரிமினல் கூடாரமாக மாறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். போலீசில் கடிதத்தில் உள்ள தகவல்களின் உண்மைதன்மையை ஆராய வேண்டும் என மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிசும் கேட்டுக் கொண்டுள்ளார்.