எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு
மும்பை: மகாராஷ்டிரத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களை சிவசேனை கட்சியும் பாஜகவும் இணைந்து சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனை இணைந்து தேர்தலை சந்தித்தது. சிறிது காலம் சுமூகமாக இருந்த இந்த உறவில் திடீரென விரிசல் ஏற்பட காரணமாயிற்று.
இதனால் பாஜக கூட்டணியிலிருந்து சிவசேனை வெளியே வந்தது. கூட்டணியில் இருக்கும் போதும் இல்லாத போதும் பாஜக தலைவர்களையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தது.
கூட்டணி பேச்சுவார்த்தை
பாஜகவுடன் சிவசேனை கூட்டணியில் இடம்பெறாது என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மும்பையில் பாஜக தலைவர் அமித்ஷா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது.
சிவசேனை
இதன் முடிவுகள் குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்தார். அவர் கூறுகையில் மகாராஷ்டிராவில் நாடாளுமன்றம், சட்டசபை தேர்தலில் பாஜகவும் சிவசேனையும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
ஒரே கொள்கை
பாஜக- சிவசேனா கூட்டணி உறுதியானது. நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக 25 இடங்களிலும் சிவசேனை 23 இடங்களிலும் போட்டியிடவுள்ளோம். பாஜக- சிவசேனை ஆகிய இரு கட்சிகளும் ஒரே கொள்கை கொண்டது.
4 மாதத்தில்
விவசாயிகளுக்கான நிவாரணம் , ராமர் கோயில் போன்றவற்றில் இருவருக்கும் கருத்தொற்றுமை ஏற்பட்டது. 4 மாதத்தில் வரவுள்ள சட்டசபை தேர்தலில் கணிசமாக தொகுதிகளை பங்கீட்டு கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் ஃபட்னவீஸ்.