"எறும்பைக் கொல்ல சுத்தியலா?" ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் வழக்கில் அதிகாரிகளை சாடிய நீதிமன்றம்!
மும்பை: மகராஷ்டிரா அரசு பிறப்பித்த மூன்று தடை உத்தரவுகளை நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால் மகராஷ்டிரா மாநிலத்தில் இனி பேபி பவுடரை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் உற்பத்தி மற்றும் விற்பனை, விநியோகம் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடரை தெரியாத இந்தியர்களே இல்லை என்று சொல்லலாம்.
அந்த அளவுக்கு பட்டி தொட்டியெல்லாம் பிரபலம் அடைந்த நிறுவனமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் உள்ளது.

PH- மதிப்புக்கு ஒத்துப்போகவில்லை
குழந்தைகளுக்கான பவுடர்,சோப் உள்ளிட்டவை தயாரிப்பில் கொடி கட்டி பறக்கும் இந்த நிறுவனத்தின் பவுடர் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு மகராஷ்டிர அரசு கடந்த செப்டம்பர் மாதம் அதிரடியாக தடை விதித்தது. ஆய்வக சோதனையில் குழந்தைகளுக்கான பவுடர் மாதிரிகள் நிலையான PH- மதிப்புக்கு ஒத்துப்போகவில்லை என்றும் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தோலில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் எனவும் கூறி இந்தத் தடையை மகராஷ்டிர அரசு விதித்து இருந்தது.

தடையை ரத்து செய்து உத்தரவு
இதனால் அதிர்ந்து போன ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும் முறையிட்டது. எனினும் இதுவும் நிராகரிக்கபட்டது. இதையடுத்து மகராஷ்டிரா மாநில உயர் நீதிமன்றத்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் முறையிட்டது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் கவுதம் படேல் மற்றும் எஸ் ஜி திகே முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகராஷ்டிரா அரசின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு விதித்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஏற்றுக்கொள்ள முடியாதது
மேலும், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கடுமையானது மட்டும் இன்றி காரணமில்லாதது.. நியாயமற்றது என்றும் கடுமையாக சாடியுள்ளது. அதேபோல 2018- ஆம் ஆண்டு ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் நிறுவனத்தின் மாதிரிகள் எடுக்கப்பட்டு 2019 டிசம்பரில் தான் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பிறகு உத்தரவு 2022 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது போன்ற தாமதம் நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதோடு தன்னிச்சையானதும் கூட..

எறும்பைக் கொல்ல சுத்தியலை..
சட்டவிதிகளுக்கு முரணாக அமைந்துள்ளது எனவும் நீதிபதிகள் மகராஷ்டிரா அரசின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பை (எப்.டி.ஏ )கடுமையாக சாடினர். மேலும், எப்.டி.ஏ போன்ற கண்காணிப்பு அமைப்பு அவசியம் தேவை என்றும் அதேவேளையில் இந்த அமைப்பு தனது பணிகளை சரியாக செய்ய வேண்டும் என்றும் ஆனால், இதுபோன்ற காலதாமதம் அதன் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். எப்.டி.ஏவின் இத்தகைய அணுகுமுறை வணிக ரீதியிலான குழப்பத்தையும் வீணடிப்பையும் ஏற்படுத்தும் என்றும் சாடிய நீதிபதிகள்.. எறும்பைக் கொல்ல அதிகாரிகள் சுத்தியலை பயன்படுத்த முடியாது என்றும் கடுமையாக சாடினர்.












Click it and Unblock the Notifications