200 எம்எல் தந்தனர்.. பிளாஸ்மா தெரபி பெற்ற நபர் திடீர் பலி.. மும்பையை உலுக்கிய மரணம்.. என்ன நடந்தது?
மும்பையில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை பெற்ற நபர் திடீர் என்று பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை: மும்பையில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை பெற்ற நபர் திடீர் என்று பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்பு நாடு முழுக்க தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது. மகாராஷ்டிராவில் 11,506 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 485 பேர் மகாராஷ்டிராவில் பலியாகி உள்ளனர்.
மும்பையில் மட்டும் 7,812 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 295 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். கொரோனாவிற்கு எதிராக பிளாஸ்மா சிகிச்சையை மகாராஷ்டிரா கையில் எடுத்துள்ளது.
வலுவான மருத்துவ கட்டமைப்பு.. திராவிட ஆட்சிகளின் சாதனை இதுதான்.. சாதிக்கும் தமிழகம்.. திணறும் குஜராத்
பிளாஸ்மா சிகிச்சை
இந்த நிலையில் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை ஒருவருக்கு கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. 53 வயது உடைய இந்த நபருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இவரின் உடல் நிலை மிக மோசமாக இருந்தது. இதனால் வெண்டிலேட்டர் உதவியுடன் இவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் இவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
கொஞ்சம் மாறியது
இந்த நிலையில் இவருக்கு 200 எம்எல் பிளாஸ்மா அளிக்கப்பட்டது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர் மூலம் பிளாஸ்மா எடுக்கப்பட்டு அது இவருக்கு அளிக்கப்பட்டது. இந்த பிளாஸ்மாவில் இருக்கும் ஆண்டிபாடிகள் முதலில் நன்றாகவே வேலை பார்த்து உள்ளது. அவர் முதல் 24 மணி நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை தேறி வந்து இருக்கிறார்.
மோசமான உடல்நிலை
ஆனால் திடீர் என்று அவரின் உடல்நிலை மிக மோசமானது. திடீர் என்று கடந்த திங்கள் கிழமை அவரின் உடல்நிலை மோசமானது. அதன்பின் நாளுக்கு நாள் அவரின் உடல் நிலை நலிவடைந்து கொண்டே சென்றது. மோசமான சுவாச கோளாறு நோய்க்குறி எனப்படும் acute respiratory distress syndrome ஏற்பட்டது. அதேபோல் ரத்தத்தில் இன்பெக்சன் ஏற்படும் septicaemia- செப்டிசீமியா தாக்குதல் இவருக்கு ஏற்பட்டது. பிளாஸ்மா மாற்றியதன் காரணமாக இவருக்கு ரத்தத்தில் இன்பெக்சன் ஏற்பட்டுள்ளது.
பலியானார்
இந்த நிலையில் இவரின் உடல் தொடர்ந்து மோசம் அடைந்தது. முடிவில் கடந்த புதன் கிழமை அவர் பலியானார். இவரின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மோசமான சுவாச கோளாறு நோய்க்குறி மற்றும் செப்டிசீமியா காரணமாக இவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க பிளாஸ்மா தெரபி மீது அச்சம் ஏற்பட தொடங்கி உள்ளது. கொரோனாவிற்கு எதிராக இதை எப்படி செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆதாரம் இல்லை
ஏற்கனவே கொரோனாவிற்கு எதிராக பிளாஸ்மா தெரபி பலன் அளிக்கும் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிளாஸ்மா தெரபி என்பது தற்போது சோதனை கட்டத்தில் மட்டுமே இருக்கிறது. பிளாஸ்மா தெரபியை சோதனைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்மா தெரபியை முறையின்றி பயன்படுத்தினால், அது உயிருக்கே ஆபத்து விளைவிக்க கூட வாய்ப்புள்ளது. இதனால் கவனமாக இருக்க வேண்டும், என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மீறியது
ஆனால் சோதனைக்கு பயன்படுத்தாமல் லீலாவதி மருத்துவமனை நோயாளின் அனுமதியுடன் பிளாஸ்மாவை சிகிச்சைக்கு பயன்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அவர் பலியாகி உள்ளார். ஆனாலும் முதல் 24 மணி நேரத்தில் அவரின் உடல் நிலை தேறி வந்ததால், கண்டிப்பாக இது ஒருவகையில் வெற்றிதான் என்று மஹாராஷ்டிரா அரசு தெரிவிக்கிறது. ஏற்கனவே லீலாவதி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை காரணமாக ஒருவர் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன
பிளாஸ்மா தெரபி என்பது ஒருவரின் ரத்தத்தில் இருந்து இன்னொருவரின் ரத்த செல்களுக்கு ஆண்டிபாடிகளை கடத்துவது ஆகும். கொரோனா தாக்கி குணமடைந்த ஒருவரின் ரத்தத்தின் பிளாஸ்மாவில் இருக்கும் எதிர்ப்பு சக்தி செல்களை இன்னொருவரின் ரத்தத்திற்கு அனுப்புவார்கள். பொதுவாக கொரோனா தாக்கி அதில் இருந்து குணமடைந்த ஒருவரின் உடலில் அந்த கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி செல்கள் அதிகம் இருக்கும். இந்த செல்களை வைத்துதான் இந்த சிகிச்சையை மேற்கொள்வார்கள்.