2ஆவது அலையால் தகிக்கும் மும்பை.. தாராவியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.. காரணம் என்ன?
மும்பை: மகாராஷ்டிர மாநிலம், தாராவியில் கடந்த ஆண்டு மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மூலம் இந்த முறை மும்பையில் கொரோனாவின் 2ஆவது அலை வீசிய போதிலும் ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு ஏற்படாததை மத்திய அரசும் உலக சுகாதார மையமும் பாராட்டி வருகின்றன.
கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில் தாராவியில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. தாராவி குடிசை பகுதி என்பதால் இடைவெளி இல்லாமல் வீடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இதனால் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும். இங்கு பெரும்பாலும் தமிழ் பேசும் மக்கள் உள்ளார்கள், மேலும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் அதிகம் வசித்து வருகிறார்கள்.
தாக்கம்
இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருகிறது. முதல் அலையை போல் மகாராஷ்டிராவில் 2ஆவது அலையின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. கடந்த ஆண்டை போல தாராவியிலும் இரண்டாவது அலை பதம் பார்க்கும் என அஞ்சப்பட்ட நிலையில் அங்கு ஒருவருக்குக் கூட பாதிப்பு இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தளர்வு
முதல் அலையின் போது விதிக்கப்பட்ட ஊரடங்குகள் தளர்வு செய்யப்பட்டு தொழில் துறைகள் இயங்கத் தொடங்கியதும் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சொந்த மாநிலங்களிலிருந்து தாராவிக்கு திரும்பி வந்தனர். இங்குள்ள நெருக்கமான குடிசை அமைப்புகளின்படி சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நடைமுறையை கொண்டு வர இயலாது.
கொரோனா
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தாராவியில் கடுமையாக இருந்த கொரோனா பாதிப்பு அங்கு எடுக்கப்பட்ட கடும் நோய் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் டிசம்பர் 25 ஆம் தேதி இரண்டாவது முறையாக கொரோனா இல்லாத நகரமாக இருந்தது தாராவி. அது போல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மும்பையில் 2 ஆவது அலை வீசி வரும் நிலையில் 3ஆவது முறையாக கொரோனா இல்லாத தாராவியாக மாறியுள்ளது.
2ஆவது அலை
இதன் மூலம் இரண்டாவது அலைக்கு எதிராக தாராவி கடுமையாக போராடுவதை உணர முடிகிறது. முதல் அலையின் போது அரசு எடுத்த நடவடிக்கைகளினால் இயற்கையாகவே ஆன்டிபாடிகள் (நோய் எதிர்ப்பு சக்தி) உருவாகியிருப்பதாலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதாலும் தாராவியில் கொரோனாவின் இரண்டாவது அலை எட்டியே பார்க்கவில்லை என மருத்துவ துறையினர் கருதுகிறார்கள்.
வீடு வீடாக
இரண்டாவது அலையின் போது தாராவிக்கு உள்ளூர் சுகாதாரத் துறையினர் வீடு வீடாக சென்று தடுப்பூசி போட ஆலோசனை வழங்கி வருவதால் அங்கு கோவிட்டுக்கு எதிராக பலரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. தாராவி மக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வசதியாக புதிய தடுப்பூசி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாராவியின் இந்த நிலையை அறிந்த மத்திய அரசும் உலக சுகாதார நிறுவனமும் பாராட்டி வருகின்றன.