பயிர் கடன்களுக்கு வட்டி ரத்து.. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்.. மகாராஷ்டிர அரசு அதிரடி அறிவிப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் மூன்று லட்ச ரூபாய் வரை பெற்றுள்ள பயிர் கடன்களின் வட்டி ரத்து செய்யப்படுவதாக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில பட்ஜெட் நேற்று அம்மாநிலச் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அம்மாநிலத்தின் துணை முதல்வரும் நிதியமைச்சருமான அஜித் பவார் 2021-22ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தலைநகரில் விவசாயிகளின் போராட்டம் 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், வேளாண் துறை பற்றிய முக்கிய அறிவிப்புகளும் இதில் இடம் பெற்றிருந்தன. அதேபோல பெண்கள் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணிக்கலாம் என்றும் அஜித் பவார் அறிவித்தார்.
நேற்று சட்டசபையில் பேசிய துணை முதல்வர் அஜித் பவார், "விவசாயிகள் இப்போது தங்கள் பயிர்க் கடன்களை 0% வட்டியுடன் திருப்பிச் செலுத்தலாம். வட்டித் தொகை முழுவதையும் மாநில அரசு ஏற்கும்.
ரூபாய் மூன்று லட்சம் வரையிலான பயிர் கடன்களுக்கு வட்டி வசூலிக்கப்படாது. விவசாயிகளுக்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறோம், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க மாநில அரசு உறுதி பூண்டுள்ளது" என்றார்.
அதேபோல பெண்களின் பெயரால் பதிவு செய்யப்படும் வீடுகளுக்கு முத்திரை தாளில் 1% தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். மேலும், கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் போது அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அஜித் பவார் அறிவித்தார்.