கனமழை: கோவாவில் உருக்குலைந்த கேபிள் பாலம்! தவித்த 40 சுற்றுலா பயணிகள்!மும்பை விமான சேவைகள் பாதிப்பு
மும்பை: தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கோவாவில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவாவில் கேபிள் பாலம் மழை தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் 40 சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டனர். மேலும் மும்பையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் காலையில் வெயில் அடிக்கும் நிலையில் மாலை, இரவு வேளைகளில் கனமழை கொட்டி தீர்க்கின்றன.
இதனால் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தான் மழை குறித்த கணிப்புகளை வானிலை ஆய்வு மையங்கள் கணித்து வெளியிட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் கனமழை
தமிழகத்தை பொறுத்தமட்டில் இன்றும் பல மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் நேற்று மாலை முதல் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. மதுரையில் நேற்று மாலை ஆறு மணி அளவில் வெளுத்து வாங்கத் தொடங்கிய கனமழை 4 மணி நேரமாக தொடர்ந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது.

மும்பை கனமழை- விமானங்கள் இடமாற்றம்
இதேபோல் மும்பையில் பல இடங்களில் மழை பெய்தது. மும்பை கிழக்கு புறநகர் பகுதிகளில் நேற்று மாலையில் கனமழை பெய்தது. காலை 8 மணி நிலவரப்படி 8.23 மிமீ மழையும், மேற்கு புறநகர் பகுதிகளில் 19.72 மிமீ மழையும், கிழக்கு புறநகர் பகுதிகளில் 27.66 மிமீ மழையும் பதிவானது. மும்பை மாநகராட்சியின் கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் சில பகுதிகளில் 62 மிமீ மழை பதிவாகி இருந்தது. கனமழை மற்றும் மோசமான காலநிலை ஆகியவற்றின் காரணமாக 8 விமானங்கள் பிற இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.

பாலம் இடிந்தது
மேலும் கோவா-கர்நாடக எல்லையில் நேற்று மாலை கனமழை பெய்தது. கேவாவின் தெற்கு பகுதியில் உள்ள பெய்த கனமழையால் துத்சாகர் நீர்வீழ்ச்சி பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள கேபிள் பாலம் இடித்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. 40 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர்.

டெல்லி வானிலை நிலவரம்
மேலும் டெல்லியில் இயல்பான வானிலையே நிலவியது. இருப்பினும் நகரில் காற்றின் தரம் அடுத்த சில நாட்கள் மோசமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் 24 மணி நேர காற்றுத் தரக் குறியீட்டின்படி பார்த்தால் டெல்லியில் காற்றின் தரம் 154 ஆக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு புள்ளிகள் குறைவாக 31.4 டிகிரி செல்சியஸாக இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 19 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதேநிலை தான் இன்றும் நடைபெற உள்ளது என இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ட்ராபிகல் மெட்டீரியாலஜி கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications