கண்முன்னே தாய்க்கு நிகழ்ந்த கொடூரம்..வெடித்துக் கிளம்பிய சிறுவன்.. சுத்தியலால் ஒரே அடி.. ஷாக் மும்பை
மும்பை : தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தியதன் காரணமாக தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை காந்திவலி கிழக்குப் பகுதியை சேர்ந்தவர் சுக்ராம். கூலித் தொழிலாளியான அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
தினமும் வேலையை முடித்துவிட்டு கிடைக்கும் சொற்ப வருமானத்திலும் அளவுக்கு அதிகமாக மது குடித்து அவர் அந்தப் பகுதியில் தொடர்ந்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

மது போதை
அது போதாதென்று மது போதை தலைக்கேறிய நிலையில் தினமும் வீட்டுக்கு வரும் சுக்ராம், செலவுக்கு பணம் கேட்ட மனைவியை கொடூரமாக அடிப்பது கட்டிவைத்து உதைப்பது என தொடர்ந்து கொடூரமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் தோளுக்கு மேல் வளர்ந்த மகன்களையும் அவர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மகன்கள் கோபம்
நாளுக்கு நாள் அவரது நடவடிக்கைகள் அதிகமாகி வந்த நிலையில் அவரது இரண்டு மகன்களும் தந்தை மீது கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் அளவுக்கு மீறிய மது போதையில் வீட்டுக்கு வந்த சுக்ராம் மனைவியை அடித்துத் துன்புறுத்த தொடங்கியுள்ளார். அப்போது வீட்டிற்குள் வந்த அவரது மகன் தனது தாயை அடிக்க வேண்டாம் என கூறியுள்ளார். ஆனாலும் அதனை கண்டு கொள்ளாத சுக்ராம் அவரது மனைவியை தொடர்ந்து தாக்கினார்.

மகன் சரண்
இதனால் ஆத்திரமடைந்த மகன் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து சுக்ராமின் தலையில் அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுக்ராம், சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் கொலை செய்த அவரது மகன் சுத்தியுடன் காவல் நிலையம் சென்று நடந்தவற்றைக் கூறி சரணடைந்துள்ளார்.

மும்பையில் அதிர்ச்சி
இதையடுத்து அவர் வீட்டிற்குச் சென்ற போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொலை செய்த சிறுவனுக்கு 18 நிறைவடையவில்லை , அதனால் அவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். தாயை கொடுமைப்படுத்திய தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications