'பிறந்த மண்ணில்' கெத்து காட்டிய நியூசிலாந்து பவுலர்.. கோபப்பட்ட விராட் கோலி.. பரபர மும்பை டெஸ்ட்
மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. நெருக்கடியான நிலையிலும், சிறப்பாக ஆடிய, தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சதம் அடித்தார்.
மழையின் காரணமாக முதல் செஷன் விளையாட முடியாததால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. மயங்க் 120 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். மறுமுனையில் விருத்திமான் சாஹா 25 ரன்களுடன் நின்றார்.
கான்பூர் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்டில் இருந்து துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே காயம் காரணமாக விலகினார்.

புஜாரா சொதப்பல்
இன்னொரு பக்கம் புஜாராவின் மோசமான ஆட்டம் தொடர்ந்தது, கேப்டன் விராட் கோலியும் கணக்கை திறக்காமல் ஆட்டமிழக்க, இந்திய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்களுடன் தத்தளித்தது. 160 ரன்களுக்கு நான்காவது விக்கெட்டை இழந்தது.

மயங்க் அகர்வால் சதம்
தொடக்கத்தில் சற்று அசௌகரியமாகதான் இருந்தார் மயங்க் அகர்வால். ஆனால் பிறகு சுதாரித்து சிறப்பாக ஆடினார். நியூசிலாந்தின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேலின் நேராக ஒரு சிக்ஸர் அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது நான்காவது சதத்தை எட்டினார். 14 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் அவர் விளாசியுள்ளார்.

மும்பையில் பிறந்தவர் அஜாஸ் படேல்
நியூசிலாந்தின் மிக வெற்றிகரமான பந்துவீச்சாளராக பட்டேல்தான் இருந்தார். இன்று நான்கு விக்கெட்டுகளையும் அவர்தான் வீழ்த்தினார். மயங்கின் நிதானமான இன்னிங்ஸுக்கு முன்னால், ஷுப்மான் கில், இன்னிங்ஸ் ஆக்ரோஷமாக இருந்தது. கில் (71 பந்துகளில் 44) ரன்களை குவித்து ஆட்டமிழந்தார், ஆனால் மும்பையில் பிறந்தவரான நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல், கில், புஜாரா மற்றும் கோஹ்லி என அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்தினார். புஜாராவும், கோஹ்லியும் பூஜ்ஜியத்தில் வெளியேறினர். படேல் மும்பையில் பிறந்தவர் என்ற பாசத்தாலோ என்னவோ, வான்கடே மைதானம் வழங்கிய கூடுதல் பவுன்ஸை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்.

கோலி ஆக்ரோஷம்
கேப்டன் கோலிலி, அஜாஸ் பட்டேலின் பந்து வீச்சில் தற்காப்பு ஆட்டம் ஆட முற்பட்டபோது, நடுவர் அனில் சவுத்ரியால் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். ஆனால் பந்து பேட்டில் பட்டுதான், கால் காப்பில் பட்டது என்பதை விராட் கோலி உணர்ந்திருந்தார். எனவே, கோலி உடனடியாக ரிவ்யூ எடுக்க முடிவு செய்தார். பந்து முதலில் மட்டையைத் தாக்கியதா அல்லது பேடில் பட்டதா என்பது ரீப்ளேயில் தெளிவாகத் தெரியவில்லை. விதிகளின்படி, டிவி அம்பயர் வீரேந்திர வர்மா, பீல்ட் அம்பயர் முடிவை ஏற்க வேண்டும். எனவே அவுட் எனக் கூறிவிட்டார். இதனால் கோலி மிகவும் கோபமாக காணப்பட்டார். அவர் இது குறித்து நடுவர் நிதின் மேனனிடமும் ஏதோ பேசினார். அப்போது அவரது ஏமாற்றம் தெளிவாகத் தெரிந்தது. அவர் டிரஸ்ஸிங் ரூமின் பால்கனியில் நின்றது பிறகு டிவி காமிராவில் காட்டப்பட்டபோதும், அவர் ஏமாற்றத்தோடு நின்று கொண்டிருந்தது நன்கு தெரிந்தது.












Click it and Unblock the Notifications