மூக்கில் கொரோனா டெஸ்ட் எடுத்தா தெரியாது “அந்த” இடத்தில் எடுக்கனும்..பெண்ணிடம் அத்துமீறியவருக்கு சிறை
மும்பை : மூக்கில் இருந்த மாதிரிகள் எடுத்து பரிசோதித்த போது கொரோனா இருப்பது உறுதியானதாக பொய்யாக கூறி, பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இருந்து கொரோனா பரிசோதனை மாதிரிகளை சேகரித்த புகாரில் கைது செய்யப்பட்ட லேப் டெக்னீசியனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அமராவதி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் வேலை செய்து வந்த 23 வயது பெண் ஒருவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஜுலை மாதம் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது.
இதையடுத்து அருகிலுள்ள பரிசோதனை மையத்திற்கு சென்ற அந்த இளம் பெண் தனக்கு கொரோனா பரிசோதனை செய்யுமாறு கூறியுள்ளார். முதலில் மூக்கிலிருந்து மாதிரிகளை எடுத்த லேப் டெக்னீசியன் அவருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக கூறி பயமுறுத்தி உள்ளார்.

பிறப்புறுப்பில் சோதனை
மேலும் துல்லியமான முடிவுகளை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதியில் இருந்து மாதிரிகள் எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இதனால் கடும் அதிர்ச்சிக்கு ஆளான அந்தப் பெண் முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். வேறு யாராவது பெண் ஊழியர்கள் உள்ளார்களா என கேட்ட போது யாரும் இல்லை என அந்த லேப் டெக்னீசியன் கூறியதோடு இந்த சோதனை மிகவும் அவசியம் என வலியுறுத்தியதால் அந்தப் பெண் கடைசியாக மாதிரிகளை எடுக்க ஒத்துக் கொண்டுள்ளார்.

போலீசில் புகார்
இதையடுத்து அந்தப் பெண்ணை தனி அறைக்கு கூட்டிச் சென்று பிறப்புறுப்பிலிருந்து மாதிரிகளை எடுத்து சோதனை செய்து பார்த்ததாகவும், அதில் கொரோனா நெகட்டிவ் என வந்ததாகவும் கூறி அந்த பெண்ணை லேப் டெக்னீசியன் அனுப்பியுள்ளார். வீட்டுக்கு சென்ற அந்த பெண் இது குறித்து தனது சகோதரரிடம் தெரிவித்ததையடுத்து தனக்கு தெரிந்த மருத்துவரிடம் இது குறித்து விசாரித்துள்ளார். உலகத்திலேயே அப்படி ஒரு சோதனை எதுவுமில்லை என்பதை மருத்துவர்கள் கூறியதை அடுத்து தனது சகோதரிக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல் நிலையத்தில் லேப் டெக்னீசியன் மீது புகார் அளித்தார்.

லேப் டெக்னீசியன் கைது
கொரோனாவின் பெயரால் பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த அவல நிலை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து விவகாரம் பூதாகரமாக வெடித்தது. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் யஷோமதி தாகூர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லேப் டெக்னீசியன் கைது செய்ததோடு, இந்திய தண்டனைச் சட்டம் 354 மற்றும் கற்பழிப்பு குற்றப் பிரிவு 376 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

10 ஆண்டுகள் சிறை தண்டனை
கிட்டத்தட்ட 17 மாதங்களாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 12 சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். பல மாத விசாரணைக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட லேப் டெக்னீசியன் கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானதாக அமராவதி நீதிமன்ற நீதிபதி கூறியிருந்தார். இந்த நிலையில் பெண்ணின் பிறப்புறுப்பில் சோதனை மாதிரிகள் எடுத்த வழக்கில் லேப் டெக்னீசியன் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து லேப் டெக்னீசியன் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications