“காதல் இல்ல லவ் ஜிகாத்”.. நடிகை தற்கொலை வழக்கில் அடித்து கூறும் பாஜக அமைச்சர்! போலீஸ் தீவிர விசாரணை
மும்பை: பிரபல தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா கடந்த 24ம் தேதி தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், லவ் ஜிகாத் காரணமாகதான் நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகரை சேர்ந்த துனிஷா சர்மா சிறு வயதிலிருந்தே பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமாகிவிட்டார். முதலில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கிய அவர் படிப்படியாக பிரபலமான நடிகையாக வலம்வரத் தொடங்கினார். சமீப நாட்களாக அலி பாபா தஸ்தான் இ காபூல் எனும் தொடரில் நடித்து வந்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (டிச.24) மும்பையில் உள்ள படப்பிடிப்பு தளத்தில் தனது அறைக்கு மேக்கப் போடுவதற்காக சென்றிருக்கிறார்.
ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியில் வரவில்லை. கதவு தட்டினாலும் திறக்கப்படவில்லை. எனவே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு படப்பிடிப்பு குழுவினர் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்கொலை
இந்த சம்பவத்தையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். துனிஷா கர்ப்பமாக இருந்ததால்தான் தற்கொலை செய்துகொண்டதாக பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர். இந்நிலையில், நேற்று பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அறிக்கையில் துனிஷா கர்ப்பமாக இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து துனிஷாவின் தயார் தனது மகள் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும், மற்றவர்களின் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். அதாவது தனது மகள் துனிஷா அவருடன் நடித்த ஷீசன் முகமது கான் என்பவரால் ஏமாற்றப்பட்டிருப்பதாக வாலிவ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

கைது
இதனையடுத்து ஷீசன் முகமது கானை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவரும் துனிஷாவும் சேர்ந்து நடித்தபோது காதலிக்க தொடங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த காதல் முடிவுக்கு வந்ததாகவும், அப்போதிலிருந்து துனிஷா தீவிர மன உளைச்சலில் இருந்ததாகவும் படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பணியாற்றியவர்கள் கூறியுள்ளனர். எனவே காவல்துறையினர் ஷீசன் முகமது கானிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அமைச்சர் பேட்டி
பிரச்னை இவ்வாறு போய்க்கொண்டிருக்க மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ ராம் கதாம், லஜ் ஜிகாத் காரணமாகதான் நடிகை தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டினார். 20 வயதே ஆன இளம் நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தால் பாலிவுட் திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு லவ் ஜிகாத்தான் காரணம் என பாஜகவினர் கூறியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அவர் கூறியதாவது, "துனிஷாவின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இதற்கு லவ் ஜிகாத் காரணமா? அல்லது வேறு ஏதாவதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். விரைவில் முழு உண்மையும் வெளிவரும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம்
இந்நிலையில், மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் கிரிஷ் மகாஜன், "இந்த விவகாரம் லவ் ஜிகாத்துடன் தொடர்புடையது. இதனை காவல்துறையினர் மிகச்சரியாக விசாரித்து வருகின்றனர். மட்டுமல்லாது லவ் ஜிகாத் விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இதற்கு எதிராக கடுமையா சட்டங்களை கொண்டு வர ஆலோசித்துள்ளோம்" என்று கூறியுள்ளார். தங்கள் ஆளும் உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பாஜக தொடர்ந்து திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications