கடைசி வரை இழுபறி.. மகாராஷ்டிராவில் அடுத்து என்ன.. ஆளுநரிடம் எஞ்சியிருப்பது 4 ஆப்ஷன்
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவின் சட்டசபை பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைய உள்ள நிலையில் அடுத்த கட்டமாக, ஆளுநரிடம், மொத்தம் 4 வாய்ப்புகள் எஞ்சியுள்ளன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகின. 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் குறைந்தபட்சம் 145 எம்எல்ஏக்களையாவது பெற்றுள்ள கட்சியால்தான் ஆட்சி அமைக்க முடியும்.
பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.

பிடிவாதம்
இதுவரை கூட்டணி கட்சிகளான, பாஜக மற்றும் சிவ சேனா ஆகிய இரு கட்சிகளும் தங்கள் பிடிவாதத்தில் இருந்து இறங்கிவரவில்லை. ஆட்சியில், சரி பாதி பங்கு வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை பாஜக ஏற்கவில்லை. மற்றொரு பக்கம், தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

ஆளுநர் என்ன செயவார்
இன்று நள்ளிரவுடன், மகாராஷ்டிர மாநில சட்டசபையின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. எனவே, இப்பொழுது ஆளுநர் அடுத்ததாக என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்துள்ளது. அவர் கையில் மொத்தம் நான்கு ஆயுதங்கள் உள்ளன என்கிறார், லோக்சபாவின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப்.
அதில் ஒரு வாய்ப்பு என்பது, தற்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸையே, தொடர்ந்து முதல்வராக பதவியில் தொடரலாம் என்று ஆளுநர் தெரிவிக்க முடியும். புதிதாக ஒரு முதல்வரை தேர்ந்தெடுக்கும் வரை காபந்து முதல்வராக தேவேந்திர பட்னாவிஸை, முதல்வராக தொடரச் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது.

வாஜ்பாய் பாணி
மற்றும் ஒரு வாய்ப்பு என்பது, யாரை வேண்டுமானாலும் முதல்வராக பதவியேற்க செய்யலாம். பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு இருப்பதாக ஆளுநர் யாரை கருதுகிறாரோ, அவரை நோக்கி கையை காட்டலாம். அதன்பிறகு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அந்த முதல்வரின் கடமையாகும். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதோ, அல்லது பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமோ, அது இரண்டாவது விஷயம். 1996 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அப்போது குடியரசு தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா, பாஜகவின் வாஜ்பாய், பிரதமராக அழைப்பு விடுத்தார். ஆனால் 13 நாள் கழித்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் வாஜ்பாய் ராஜினாமா செய்தார்.

சட்டசபையிலேயே
இதில் மற்றொரு வாய்ப்பையும் ஆளுநரால் வழங்க முடியும். அது என்னவென்றால், சட்டசபையை கூட்டி அங்கேயே யார் முதல்வர் என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்று ஆளுநரால் உத்தரவிட முடியும். அவ்வாறு சட்டசபையிலேயே ஒருவரை முதல்வராக பெரும்பான்மை எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுத்துவிட்டால் பெரும்பான்மையை மறுபடியும் நிரூபிக்க தேவை இருக்காது. தலை எண்ணிக்கையோ அல்லது வாக்குபதிவு பெட்டியை வைத்து ஓட்டு சீட்டு முறையிலோ, இதுபோல முதல்வரை தேர்ந்தெடுக்க முடியும். உத்தரபிரதேசத்தில் கல்யாண்சிங் இப்படித்தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998-ஆம் ஆண்டில் இந்த நிகழ்வு உத்தரபிரதேச சட்டசபையில் நடைபெற்றது.

குடியரசு தலைவர் ஆட்சி
மற்றொரு வாய்ப்பு என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். அதாவது எந்த கட்சியும் ஆட்சியமைக்க வரவில்லை என்பதால், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்வதாக ஆளுநர் தெரிவிக்க முடியும். இவ்வாறு தெரிவித்தால் குடியரசு தலைவர் ஆட்சி காலம் முடிவடைந்ததும், மீண்டும் புதிதாக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது அரசின் கருவூலத்திற்கு மிகப்பெரிய இழப்பாகிவிடும். இருப்பினும், இந்த நான்கும் ஆளுநர் முன்னிலையில் உள்ள வாய்ப்புகள் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications