மகாராஷ்டிரா மழை : ஆறுகளில் பெருகிய வெள்ளம்... உடைந்த பாலம் - சிக்கித்தவித்த பச்சிளம் குழந்தை மீட்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய பச்சிளம் குழந்தையை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் பெருமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சதாரா மாவட்டத்தில் உள்ள ஆற்றில் பெருகிய வெள்ளத்தால் பாலம் முற்றிலும் உடைந்தது. வெள்ளத்தில் சிக்கிய பச்சிளம் குழந்தையையும், தாயையும் மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவில் பெய்து வரும் பருவமழை கடந்த புதன் முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாட்கள் கோரமுகத்தை காட்டியது. கொங்கன் பகுதி மாவட்டங்கள் மற்றும் மேற்கு மராட்டிய மாவட்டங்களில் இந்த கனமழை இடைவிடாமல் கொட்டித்தீர்த்தது.
மகாராஷ்டிராவில் பெய்த வரலாறு காணாத மழையால் நேரிட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்து உள்ளது.
மகாராஷ்டிராவின் ரத்னகிரி, ராய்காட், சத்தாரா, கோலாப்பூர் மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொங்கன் பகுதியில் மீட்பு பணியில் முப்படையினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பேய் மழையால் கிருஷ்ணா, பஞ்சகங்கா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி கரைபுரண்டு ஓடின. கொய்னா உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதும் நகர்ப்புறங்கள், கிராம புறங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர், சாங்கிலி, சதாரா, புனே, நாக்பூர் போன்ற மாவட்டங்கள் வெள்ளத்தால் பேரழிவை சந்தித்தன.
சதாரா மாவட்டத்தில் வாங் ஆற்றில் பெருகிய வெள்ளத்தால் பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக 25 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேர் சிக்கித் தவித்தனர், அவர்களைக் காப்பாற்றுவதற்காக பொது மக்களால் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பெகாசஸ் ஒட்டு கேட்பு- விவாதிக்க என்னதான் அச்சம்? மோடி- அமித்ஷா மவுனத்தை கலையுங்க- ராகுல் ஆவேசம்
கரையின் இருபுறமும் கயிறு கட்டி வரிசையாக நின்று கொண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர். வெள்ளத்தில் சிக்கித் தவித்த சிறிய குழந்தையும் மீட்கப்பட்டது. குழந்தைகளை பத்திரமாக மீட்ட அனைவரையும் பொதுமக்கள் பாராட்டினர். சிறு குழந்தையும் அவரது தாயாரும் நன்றாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.