“சாதிகளை கடவுள் உருவாக்கவில்லை... மத குருக்கள்தான் உருவாக்கியுள்ளனர்".. ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் பேச்சு
இதேபோல ஏற்கெனவே இஸ்லாமியர்கள் குறித்து இவர் கூறியிருந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
மும்பை: "சாதிகளை உருவாக்கியது மத தலைவர்கள்தான், கடவுள் அல்ல." என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார். சாதிகள் குறித்த சர்ச்சைகள் நீண்டு வரும் நிலையில், மோகன் பகவத்தின் இக்கருத்து அனைவரின் கவனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது.
பிரபல மத குருவான புனித சிரோமணி ரோஹிதாஸின் 647வது பிறந்த தினத்தையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ரவீந்திர நாட்டிய மந்திர் ஆடிடோரியத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, "நமது நாட்டின் மனசாட்சியும் உணவுகளும் அனைவருக்கும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. ஆனால் கருத்துக்கள் மட்டும் மாறுபட்டு இருக்கின்றன.
நாம் சம்பாதிக்கும்போது நமக்கு பொறுப்பு உருவாகிறது. ஒவ்வொரு வேலையும் நமது சமுதாயத்திற்காக பங்காற்றுகின்றன. அப்படி இருக்கையில், எந்த வேலையும் இதில் பெரியது சிறியது கிடையது. வேலைகளில் பாகுபாடுகள் இல்லாது போல மனிதர்களிலும் பாகுபாடுகள் கிடையாது. கடவுள்களை பொறுத்த அளவில் இங்கு எல்லோரும் சமம்தான். இதில் சாதியோ அல்லது இன்ன சில வேறுபாடுகளோ மத குருக்களால்தான் உருவாக்கப்பட்டுள்ளன.
வேறுபாடுகள்
இப்படியான வேறுபாடுகள் தவறான விஷயமாகும். நாட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒரே உணர்வுதான் இருக்கிறது. ஆனால் கருத்துக்கள் வேறுபடுகின்றன. துளசிதாஸ், கபீர் மற்றும் சூர்தாஸ் ஆகியோவை விட ரோஹிதாஸ் மேன்மை கொண்டவர். எனவேதான் அவர் புனித சிரோமணி என்று அழைக்கப்படுகிறார். இவர் பலரின் இதயங்களை தொட்டு அவர்களை கடவுள் நம்பிக்கை கொள்ளச் செய்துள்ளார். மதம் என்பது பசியை போக்குவது மட்டுமே என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மதத்தின் பணிகள் இதைவிட பெரியது.
வேலைகள்
நீங்கள் உங்கள் வேலை எதுவாக இருந்தாலும் அதை செய்யுங்கள். உங்கள் மதத்தின்படி அதனை செய்யுங்கள். அதன் மூலம் சமூகத்தை ஒன்றிணைத்து அதன் முன்னேற்றத்திற்காக பாடுபடுங்கள், இதைதான் மதம் வலியுறுத்துகிறது. இதைதான் ரோஹிதாஸ் வலியுறுத்தினார். இப்படியாகதான் அவர் பல சீடர்களை உருவாக்கினார். சத்தியம், இரக்கம், அகத்தூய்மை மற்றும் தொடர்ச்சியான கடின உழைப்பு மற்றும் முயற்சி ஆகிய நான்கு மந்திரங்களை ரோஹிதாஸ் சமூகத்திற்கு கொடுத்து சென்றிருக்கிறார். இதனை நாம் முழு மூச்சாக கடைப்பிடிக்க வேண்டும்.
மதம்
உங்களை சுற்றி நடக்கும் எல்லாவற்றிலும் கவனம் செலுத்துங்கள். ஆனால், எந்த சூழ்நிலையிலும் உங்களின் மதத்தை விட்டுவிடாதீர்கள். மதச் செய்திகளை வெளிப்படுத்தும் விதம் வேறுபட்டாலும் மதம் ஒன்றைதான் போதிக்கிறது. யார் வேண்டுமானாலும் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால், அது மற்ற மதங்களுக்கு தீங்கிழைக்காமல் இருக்க வேண்டும்" என்று மோகன் பகவத் கூறியுள்ளார். சனாதனத்தை வலியுறுத்தும் மனு தர்மம்தான் சாதிய பாகுபாடுகளுக்கு அடிப்படை என்று திமுக, திக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் மோகன் பகவத், சாதியை சாமியார்கள்தான் உருவாக்கியுள்ளனர் என்று கூறியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
இஸ்லாம்
இதற்கு முன்னர் இதேபோல இஸ்லாமியர்கள் குறித்தும் இவர் கூறியிருந்த கருத்து அனைவரின் கவனத்திற்கும் உள்ளாகியிருந்தது. அதாவது, "இந்தியா எப்போதுமே இந்துஸ்தான் தான். இருப்பினும் இங்கு இஸ்லாமியர்கள் அச்சமின்றி வாழலாம். ஆனால் அவர்கள் தேவையில்லாமல் தங்கள் வரலாற்று பெருமையை பேசக்கூடாது" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.