முகேஷ் அம்பானி வீட்டுக்கு வந்த வெடிகுண்டு கார் வழக்கில் திருப்பம்.. "என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்" கைது
மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகே கார் நிறைய வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், மும்பை காவல்துறையின் முன்னாள் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் பிரதீப் சர்மாவை என்ஐஏ கைது செய்துள்ளதாக ஏஜென்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மும்பையின் அந்தேரியில் உள்ள பிரதீப் சர்மா வீட்டில் என்ஐஏ மற்றும் சிஆர்பிஎஃப் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) குழுவினர் சோதனை நடத்தி சில ஆவணங்கள் சிக்கியதால், உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.
இன்று அதிகாலை 5 மணிக்கு ஷர்மாவின் வீட்டிற்கு வந்த விசாரணை குழு தொடர்ந்து 6 மணி நேரம் தேடுதல் நடத்திய பிறகு கைது நடவடிக்கையை எடுத்தனர். இதன்பிறகு, பிரதீப் சர்மா விசாரணைக்கு என்ஐஏ அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

வெடிகுண்டு
பிப்ரவரி 25ம் தேதி, மும்பையில், முகேஷ் அம்பானி இல்லத்திற்கு அருகே ஒரு எஸ்யூவி வகை காரில் 20 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டதல்லவா, அது பிரதீப் ஷர்மாவின் தொடர்பு மூலம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காவல்துறை
சிவசேனா கட்சி சார்பில் 2019ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பிரதீப் சர்மா, அப்போது தனது போலீஸ் வேலையை விட்டு விலகினார். தேர்தலில் தோல்வியடைந்த அவர் இப்போது பி.எஸ். அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

தொழிலதிபர் திடீர் பலி
அம்பானி வீட்டுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார், தானேவைச் சேர்ந்த தொழிலதிபர் மன்சுக் ஹிரான் என்பவருக்குச் சொந்தமானது. ஆனால், மார்ச் 5 ம் தேதி மும்ப்ரா நீரோடையில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அடுத்தடுத்து கைது நடவடிக்கை
வெடிபொருட்களை ஏற்றிய வாகனத்தை நிறுத்திய வழக்கில், முக்கிய குற்றவாளி சச்சின் வேஸ் என்பவர்தான். அவர் என்ஐஏவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்தான், மன்சுக் ஹிரெனை கொலை செய்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே, சந்தோஷ் ஷெலர், ஆனந்த் ஜாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications