தேதி ரெடி! எதிர்க்கட்சி கூட்டணியின் 3வது ஆலோசனை மும்பையில் 2 நாள் நடக்கிறது! தலைமை யாரு தெரியுமா?
டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் 2 நாட்கள் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கான தேதி இன்று வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. ஆனால் பாஜகவின் வெற்றியை தடுத்து மத்தியில் கூட்டணி ஆட்சியை கொண்டு வரும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

இதற்காக காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக, சமாஜ்வாதி, ஆம்ஆத்மி உள்பட மொத்தம் 26 கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.
இந்த எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலோசனை கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்தது. இதற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமை வகித்தார். அதன்பிறகு 2வது ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் பெங்களூரில் 2 நாட்கள் நடந்தது. சோனியா காந்தி தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, முதல்வர் முக ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத் யாதவ், அவரது மகனான பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈ.ஆர்.ஈஸ்வரன் , மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காதர் மொய்தீன் உள்ளிட்டவர்க உள்பட மேலும் பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் 26 கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‛I-N-D-I-A' என பெயர் வைக்கப்பட்டது. மேலும் பாஜகவை எதிர்ப்பது பற்றியும், அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் இந்த கூட்டத்தில் வவாதிக்கப்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் மும்பை கூட்டத்துக்கான தேதியை தீர்மானிப்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் தான் எதிர்க்கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் 2 நாட்கள் நடைபெற உள்ளது. அதன்படி ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்துக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மற்றும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரான சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆகியோர் தலைமை வகிக்க உள்ளனர். இந்த கூட்டத்திலும் 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், ஒவ்வொரு மாநிலங்களிலும் கட்சிகள் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications