ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்! அம்பேத்கர் பிறந்தநாளில் வேற லெவல் சம்பவம்! திணறிய காவல்துறை!
மும்பை : பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையிலும், மகாராஷ்டிராவின் சோலாப்பூர் நகரில் 500 நபர்களுக்கு ஒரு உள்ளூர் அமைப்பு வியாழன் அன்று பெட்ரோலை லிட்டருக்கு 1 ரூபாய்க்கு விற்பனை செய்தது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 16 நாட்களில் 14 முறை உயர்த்தப்பட்டு, லிட்டருக்கு 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 9 நாட்களாக விலை உயர்வு இல்லாத நிலையில் தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 105.41 ரூபாயாகவும், டீசல் 96.67 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வர்த்தக தலைநகரான மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு 120.51 ஆகவும், டீசல் லிட்டருக்கு 104.77 ஆகவும் விற்கப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை
கொரோனா காரணமாக ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த மக்கள் தற்போது தான் ஓரளவு மீண்டு வருகின்றனர். இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதேபோல வணிகப் பயன்பாட்டுக்கான வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை 2,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் டீ காபி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

எதிர்கட்சிகள் போராட்டம்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதும் இந்தியாவில் மட்டும் விலை அதிகமாக உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது. விலையை நிர்ணயிப்பது முழுக்க முழுக்க எண்ணெய் நிறுவனங்கள் தான் எனவும் அதில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் கூறி வருகிறது. இதனையடுத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து உள்ளனர்.

1 ரூபாய்க்கு பெட்ரோல்
இந்நிலையில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், மகாராஷ்டிராவின் சோலாப்பூர் நகரில் 500 நபர்களுக்கு ஒரு உள்ளூர் அமைப்பு வியாழன் அன்று பெட்ரோலை லிட்டருக்கு 1 ரூபாய்க்கு விற்பனை செய்தது. பெட்ரோல் வாங்க வந்த ஒருவருக்கு ஒரு லிட்டர் எரிபொருள் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனாலும், பெட்ரோல் பங்கில் மக்கள் கூட்டம் அலைமோதிய கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

விலையை குறைக்க வேண்டும்
டாக்டர் அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர் சிறுத்தைகள் ஏற்பாடு செய்திருந்த நிலையில், "பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. நரேந்திர மோடி ஆட்சியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹ 120 ஆக உயர்ந்துள்ளது. எனவே மக்களுக்கு நிவாரணம் அளிக்கவும், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடவும், ஒரு ரூபாய்க்கு பெட்ரோல் வழங்க முடிவு செய்தோம்," என அந்த அமைப்பின் மாநில தலைவர் மகேஷ் சர்வகோடா கூறியுள்ளார். எங்களைப் போன்ற ஒரு சிறிய அமைப்பினால் 500 பேருக்கு நிவாரணம் வழங்க முடியுமென்றால், அரசும் நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த விலையில் பெட்ரோல் வாங்கியதில் மகிழ்ச்சி அடைந்தேன். ஒவ்வொரு நாளும் உயரும் பணவீக்கத்தின் மத்தியில் நான் கொஞ்சம் பணத்தை சேமித்தேன் என்று ஒரு ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கிய ஒருவர் கூறினார்.












Click it and Unblock the Notifications