இந்த காலத்தில் சாதிகள் செட் ஆகாது, கைவிடணும்! அழுத்தமாக சொன்ன மோகன் பகவத்! உற்றுப்பார்த்த தொண்டர்கள்
மும்பை: நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
மகாராஷ்டிராவின் நாக்பூரில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத் சாதிய கட்டமைப்பு குறித்தும் வர்ணம் குறித்தும் கூறிய கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மோகன் பகவத்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று வெள்ளிக்கிழமை நாக்பூரில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், வர்ணம் மற்றும் ஜாதி போன்ற கருத்துக்கள் முற்றிலும் கைவிடப்பட வேண்டும் என்று கூறியது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஜாதிய கட்டமைப்பு இப்போது தொடர எந்தவொரு தேவையும் சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

சமத்துவம்
நாக்பூரில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், "சமீபத்தில் டாக்டர் மதன் குல்கர்னி மற்றும் டாக்டர் ரேணுகா போகரே இணைந்து "வஜ்ரசூசி துங்க்" என்ற புத்தகத்தை எழுதி இருந்தனர். அதில் அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளனர். சமூகத்தில் சமத்துவம் என்பது இந்தியப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவே இருந்து உள்ளது. ஆனால் அது காலப்போக்கில் மறக்கப்பட்டது.. இதன் காரணமாகவே நமது சமூகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டன.

வர்ணம் மற்றும் சாதி தேவையில்லை
வரலாற்றைப் பார்த்தால் வர்ணம் மற்றும் சாதி அமைப்புகளுக்கு முதலில் பாகுபாடு இல்லை என்பது புரியும். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு பயன் இருந்தன. பிறகு இந்த முறை ஏன் இன்னும் இருக்கிறது என்று யாராவது கேட்டால், அது கடந்த காலத்தில் இருந்த ஒன்று என்றும் அதை மறந்துவிட வேண்டும் என்றும் நாம் பதில் அளிக்க வேண்டும். இந்த காலத்தில் பாகுபாட்டை ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் சமூகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். சாதி மற்றும் வர்ணம் போன்ற கருத்துகளை நாம் முற்றிலுமாக கைவிட வேண்டும்.

தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும்
இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் கடந்த காலங்களில் வாழ்ந்தவர்கள் தவறு செய்து உள்ளனர் தான். அந்த தவறுகளை ஏற்றுக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது. நம் முன்னோர்கள் செய்த தவறுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் அவர்கள் தாழ்ந்தவர்களாக மாறிவிடுவார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். ஏனென்றால் உலகின் அனைத்து நாடுகளிலும் முன்னோர்கள் தவறு செய்து உள்ளனர்.

டெல்லி
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கடந்த மாதம் தான் டெல்லியில் உள்ள ஒரு மசூதி மற்றும் மதரசாவிற்குச் சென்ற அங்கிருந்த இஸ்லாமிய மத குருமார்கள் உடன் உரையாடினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நமது நாட்டில் சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுபவர்கள் ஆபத்தில் இல்லை.. அவர்களின் அச்சத்தைப் போக்க இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து அவர்களுடன் இணைந்து செயல்படும்" என்று கூறி இருந்தார்.

சட்டம்
அதேபோல ஆர்எஸ்எஸ் தொடக்க விழாவில் கடந்த வாரம் பேசிய மோகன் பகவத், "இந்தியாவிற்கு மக்கள்தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் தேவை. மதம் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளும் கட்டாய மதமாற்றங்களும் அதிகரித்துவிட்டன. இதனால் இதுபோன்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நாடு உடைந்துவிடும் அச்சம் ஏற்படக்கூடும். இதற்கு தெற்கு சூடான் உள்ளிட்ட உதாரணம்.

சமநிலை
மக்கள்தொகை கட்டுப்பாட்டு மட்டுமின்றி, மத அடிப்படையிலான மக்கள்தொகை சமநிலையும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்.. இதை நம்மால் புறக்கணிக்க முடியாது. மக்கள் தொகைக்கு வளங்கள் தேவை. வளங்களை முறையாக உருவாக்காமல் மக்கள்தொகை மட்டும் வளர்ந்தால், அது ஒரு சுமையாகவே மாறும்.. அதேநேரம் வளர்ச்சிக்கு மக்கள் தொகை முக்கியம் எனவே இந்த இரண்டையும் மனதில் வைத்து முடிவு எடுக்க வேண்டும்" என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications