மும்பையில் நெகிழ்ச்சி! கோர்ட்டுக்கு செல்லும் முன். . 'தாயை கட்டி அணைத்துவிட்டு சென்ற சஞ்சய் ராவத்'
மும்பை: சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் எம்.பி அமலாக்கத்துறை விசாரணைக்காக கோர்ட்டுக்கு செல்வதற்கு முன்பு தன் தாயை கட்டி அணைத்துவிட்டு சென்ற சம்பவம் மும்பையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டியத்தில் பாஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்ட சிவசேனா, தேர்தலுக்கு பின்னர் கொள்கைகளில் முரண்பாடான காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.
இதனால் மற்ற கட்சிகளை விட அதிக தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும் பாஜனதா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.
மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் சஞ்சய் ராவத்- காவலில் எடுக்க அமலாக்கத்துறை திட்டம்
பதவியில் இருந்து விலகிய உத்தவ் தாக்கரே
முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தலா 2 அரை ஆண்டுகள் கொடுக்காததால் சிவசேனா மகாஷ் விகா அகாடி என்ற கூட்டணியை அமைத்ததோடு ஆட்சி கட்டிலிலும் அமர்ந்தது. மராட்டிய முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார். இந்த நிலையில் சிவசேனா கட்சியில் முக்கிய தலைவரான ஏக்னாத் ஷிண்டே திடீரென சிவசேனா அதிருப்தி அணியினை உருவாக்கி உத்தவ் தாக்கரேக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். மேலும் நாங்கள் தான் உண்மையான சிவசேனா அணியினர் என்று கூறி பாஜனதாவுடன் கூட்டணி வைத்து நெருக்கடி கொடுத்ததால் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.
தினம் தினம் பரபரப்பு
இவ்வாறாக மராட்டிய அரசியலில் தினம் தினம் பரபரப்புக்கு பஞ்சமில்லை என்ற சூழல் நிலவி வரும் நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் உத்தவ் தாக்கரேவின் தீவிர ஆதரவாளராகவும் உள்ள எம்.பி சஞ்சய் ராவத் குடிசை சீரமைப்பு திட்டத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது தொடர்பாக சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறையின நோட்டீஸ் அனுப்பி வந்தனர். ஆனால் இரண்டு முறை அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தும் சஞ்சய் ராவத் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
10 மணி நேர சோதனை
இந்த நிலையில் 2 முறை நோட்டீஸ் அனுப்பியும் சஞ்சய் ராவத் கோர்ட்டில் ஆஜராகாததால் இந்த வழக்கு தொடர்பாக நேற்று அவரது வீடு மற்றும் மும்பையில் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர், மத்திய ரிசர்வ் போலீசாருடன் இணைந்து சோதனை நடத்தினர். சுமார் 10 மணி நேர சோதனைக்கு பிறகு மாலை 5 மணியளவில் அமலாக்கத்துறையினர் விசாரணைக்காக சஞ்சய் ராவத்தை வீட்டில் இருந்து மும்பை பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் நள்ளிரவில் சஞ்செய் ராவத் கைது செய்யப்பட்டார். இந்த சோதனையில் அவரது வீட்டில் ரூ.11½ லட்சம் ரொக்கம் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு
இதற்கு மத்தியில் மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பை முழுவதும் போராட்டத்தில் ஈடுபட சிவசேனா கட்சி திட்டமிட்டுள்ளது. பெரிய அளவில் போராட்டம் நடத்த அந்த கட்சி திட்டமிட்டுள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க மும்பையில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், மும்பையில் உள்ள பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் ராவத் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். இதற்காக சஞ்சய் ராவத் எம்பியை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அமலாக்கத்துறையினர் அழைத்து சென்றனர்.
தாயை கட்டி அணைத்துவிட்டு. . .
அப்போது தனது குடும்பத்தினருடன் சஞ்சய் ராவத் நெகிழ்சியுடன் பேசினார். குறிப்பாக தனது தாயை கட்டி அணைத்தது அங்கிருந்தவர்களை உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்தியது. நான் குற்றம் ஏதும் செய்யவில்லை. ஊழலிலும் ஈடுபடவில்லை. இது சிவசேனா நிறுவனரான பால் தாக்கரே மீது சத்தியம் செய்கிறேன். அவர் எங்களுக்கு போராட கற்றுக்கொடுத்துள்ளார். எந்த சூழ்நிலையிலும் சரணடைய மாட்டேன் என்று கூறினார். கோர்ட்டில் ஆஜராவதற்கு முன்பு சஞ்சய் ராவத் அவரது தாயை கட்டி அணைத்து விட்டு சென்றது அங்குள்ளவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.