மக்கள் உத்தரவை மதிப்போம்.. எதிர்க்கட்சியாக அமர்வோம்.. சரத் பவார்
மும்பை: மக்கள் எங்களை எதிர்க்கட்சியாக அமரவே உத்தரவிட்டுள்ளனர். அந்தத் தீர்ப்பை நாங்கள் மதிப்போம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா இடையே தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதனால் ஆட்சி அமைக்க முடியாமல் இரு கட்சிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இடையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, சிவசேனா தலைவர்கள் சந்தித்துப் பேசியதால் பரபரப்பும் ஏற்பட்டது.

இந்த நிலையில் தனது நிலையை சரத் பவார் தெளிவுபடுத்தியுள்ளார். மக்கள் எங்களை எதிர்க்கட்சியாக அமரவே வாக்களித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், முதல்வர் பதவிக்காக பாஜக சிவசேனா இடையே மோதல் நிலவுவது குழந்தைத்தனமாக உள்ளது. சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தருமா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. அதுகுறித்து கட்சி எந்த முடிவையும் எடுக்கவில்லை.
எங்களை எதிர்க்கட்சியாக அமர வேண்டும் என்று மக்கள் பணித்துள்ளனர். அதை நாங்கள் மதிப்போம். எங்களிடம் பெரும்பான்மை பலம் இல்லை. மக்கள் அதைத் தரவில்லை. அந்தத் தீர்ப்பை நாங்கள் மதிக்க வேண்டும். எங்களுக்குக் கொடுக்கப்படும் பொறுப்பை நாங்கள் முறையாக செயல்படுத்துவோம்.
மக்கள் பாஜக சிவசேனாவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். வாய்ப்பளித்துள்ளனர். அதை அவர்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். ஆனால் இப்போது நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் சிறு குழந்தைகளின் விளையாட்டு போலவே எனக்குத் தோன்றுகிறது என்றார் பவார்.












Click it and Unblock the Notifications