கணக்குகளை மாற்றிய சரத் பவார்.. ‘மம்தா பானர்ஜி ரெடி’.. காங்கிரஸுக்கு தூது.. பாஜகவுக்கு பெரிய சிக்கல்?
மும்பை : காங்கிரஸ் கட்சியுடனான வேற்றுமைகளை மறந்து பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணியை உருவாக்க மம்தா பானர்ஜி தயாராக இருப்பதாக என்சிபி தலைவர் சரத் பவார் தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு எதிராக முன்னணியில் இறங்கி வந்த மம்தா பானர்ஜி திடீரென சில விஷயங்களில் பின்வாங்கியதும், பாஜக மீதான விமர்சனங்களைக் குறைத்துக் கொண்டதும் அரசியல் கட்சிகள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பின.
பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணியில் இணைய மம்தா பானர்ஜி விரும்பவில்லை என்றும் தகவல்கள் பரவின. இது பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்பதால் அரசியல் பார்வையாளர்கள் இம்முடிவை விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு மம்தா பானர்ஜி தயாராகி இருப்பதன் மூலம் பாஜகவுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
'ட்விஸ்ட்' டெல்லி திரும்பும் ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல்?
பாஜக - மம்தா
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி 3வது முறையாக முதலமைச்சராக இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் காட்டமான கருத்துக்களை தெரிவித்து வந்தார். மம்தா பானர்ஜியை குறிவைத்து பாஜக தலைவர்களும் விமர்சனக் கணைகளை ஏவி வந்தனர். மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மம்தாவின் கட்சியைச் சேர்ந்தவர்களை சுற்றி வளைத்ததும் இந்த மோதல் போக்கை தீவிரப்படுத்தியது.
பின்வாங்கிய மம்தா?
குடியரசுத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் காங்கிரஸை விட அதில் அதிக ஆர்வம் காட்டினார் மம்தா பானர்ஜி. உடனடியாக எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொண்டார். டி.எம்.சி மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மம்தா பானர்ஜி ஆர்வம் காட்டவில்லை. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கூடி மார்கரெட் ஆல்வாவை தேர்வு செய்த நிலையிலும், அந்த தேர்தலை புறக்கணித்தார் மம்தா பானர்ஜி. இது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது.
யூகங்கள்
சமீபத்தில் கூட அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் தவறாக பயன்படுத்துவதன் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி இல்லை என்று நம்புகிறேன் என்றும் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் மம்தா பானர்ஜி. அதேநேரம், காங்கிரஸ் உடனும் இணக்கமான போக்கை கையாளததால், மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கக்கூடும் என்ற யூகங்களும் கிளம்பின. அதாவது காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை மம்தா பானர்ஜி அமைக்கக்கூடும் என்றெல்லாம் பேசப்பட்டது.
சரத் பவார் சொன்ன தகவல்
இந்நிலையில் தான், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தேசிய நலன்களுக்காக காங்கிரஸ் உடனான தனது கருத்து வேறுபாடுகளை மறந்து, 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியை உருவாக்கத் தயாராக இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.
மம்தாவின் முடிவு
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களிடம் பேசுகையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசிய நலன் கருதி காங்கிரஸ் உடனான தனது கருத்து வேறுபாடுகளை மறந்து, 2024ல் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க.வுக்கு எதிராக வலிமையான கூட்டணியை உருவாக்கத் தயாராக இருக்கிறார் எனத் தெரிவித்தார்.
பழசை மறக்க ரெடி
மேற்கு வங்க மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட அனுபவத்தை மறக்க தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார் என சரத் பவார் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத் தேர்தலின் போது, காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) கூட்டணி பாஜக அதிக இடங்களைப் பெற உதவியது என்று மம்தா கருதினார். அந்த விவகாரத்தைத்தான் தற்போது மறப்பதாக தெரிவித்துள்ளார்.
இனி ஈஸி
சரத் பவாரின் இந்தக் கருத்து தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் சரத் பவார், மம்தாவின் இந்த முடிவைப் பற்றி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் கட்சிகளின் ஒன்றிணைவை மம்தாவின் இந்த முடிவு எளிதாக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பாஜகவுக்கு கூடுதல் சிக்கல் ஏற்படக்கூடும்.