காங்கிரஸ் இனி வேலைக்கு ஆகாது.. பாஜகவை எதிர்க்க 'இவரே' சரியான நபர்.. கொளுத்திப்போட்ட சிவசேனா
மும்பை: தற்போதைய சூழ்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வழிநடத்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவரே சரியான நபர் என்று சிவசேனா தெரிவித்துள்ளது, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் தற்போது சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.
கடந்த சில நாட்களாகவே அதிகரிக்கும் கொரோனா, சட்ட ஒழுங்கு சிக்கல், ஊழல் குற்றச்சாட்டு என தலைவலியில் உள்ளது. இந்நிலையில், தற்போது சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சரத் பவார் சரியான நபர்
காங்கிரஸ் செயல்படாத நிலையில் உள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் தேசிய அளவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வழிநடத்த சரத் பவாரே சரியான நபராக இருப்பார் என்று அவர் தெரிவித்தார். மேலும், மற்ற கட்சிகள் எதுவும் சரத் பவார் தலைமை தாங்குவதற்கு ஆட்சேபம் தெரிவிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அனைத்து பிராந்திய கட்சிகளும் தற்போது பாஜகவை எதிர்ப்பதால் இதை வரவேற்பார்கள் என்றும் சஞ்சய் ரவுத் கூறினார்.
மராட்டிய அரசு
தேசியவாத தலைவரான சரத் பவார் தற்போது மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளார். சுமார் 60 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்டவர் சரத் பவார். மகாராஷ்டிராவில் கடந்த 2019ஆம் ஆண்டு பாஜகவின் திட்டங்களைத் தவிடுபொடியாக்கி, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அமைந்ததில் இவரது பங்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
கொந்தளிக்கும் காங்கிரஸ்
ஆனால், சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தின் இந்தப் பேச்சைக் காங்கிரஸ் கட்சி ரசிக்கவில்லை. மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறுகையில், சிவசேனா கட்சியே ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இல்லை. எனவே கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் இப்படிப் பேசுவதை சிவசேனா தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கூட்டணியில் இல்லை
மற்றொரு காங்கிரஸ் தலைவர் ஹுசைன் தல்வாய், சிவசேனா கடந்த தேர்தலில் அதிக இடங்களைப் பெற்றதால் அவர்களுக்கு முதல்வர் பதவியை வழங்கினோம். ஆனால் இன்னும்கூட சிவசேனா ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணையவில்லை. காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்ததால் மட்டுமே சிவசேனாவால் ஆட்சி அமைக்க முடிந்தது என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. சஞ்சய் ரவுத்தின் பேச்சை சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.