ரூ.100 கோடி மாமூல் விவகாரம்.. சர்ச்சையில் மகாராஷ்டிரா அமைச்சர்.. இன்று நடக்கிறது அவசர மீட்டிங்
மும்பை: மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக்கிற்கு எதிராக மும்பை முன்னாள் கமிஷ்னர் பரம் பீர் சிங் கொடுத்த ஊழல் புகார் குறித்து இன்று அங்கு ஆளும் கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர் .
மும்பையில் முகேஷ் அம்பானி வீட்டிற்கு வெளியே வெடி பொருட்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட கார் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வெடிகுண்டு வழக்கில் தற்போது மும்பையின் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரி சச்சின் வேஸ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு இருக்கிறார். இந்த பாதுகாப்பு குறைபாட்டை காரணம் காட்டி மும்பையின் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பரம் பீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் மீது ஊழல் புகார்களை வைத்துள்ளார். இந்த ஊழல் புகார்தான் மகாராஷ்ட்ரா அரசியலை உலுக்கி உள்ளது.
மகாராஷ்டிராவில் இருக்கும் பிசினஸ்மேன்களிடம் இருந்து மாதமாதம் 100 கோடி ரூபாய் மாமூல் வாங்க வேண்டும் என்று தேஷ்முக் கூறியதாக பரம் பீர் சிங் கூறியுள்ளார். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் சச்சின் வேசுக்கு நெருக்கடி கொடுத்து மாமூல் வாங்க சொன்னதாக இடமாற்றம் செய்யப்பட்ட கமிஷ்னர் பரம் பீர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் தேஷ்முக் மீது வைக்கப்பட்டுள்ள இந்த புகார் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக தேஷ்முக் பதவி விலக வேண்டும் என்று பாஜக சார்பாக தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது .
இந்த நிலையில் மகாராஷ்டிரா கூட்டணி ஆட்சியில் இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஊழல் புகார் காரணமாக தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து நேற்று பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.. இது மிகப்பெரிய குற்றச்சாட்டு. இதை நேர்மையாக விசாரிக்க வேண்டும்.
ஆனால் இதில் பணம் கைமாறியதற்காக எந்த ஆதாரமும் இல்லை. அதேபோல் இந்த போலீஸ் அதிகாரி ஏன் தான் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட பின் இப்படி புகார் வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க இப்படி சதி நடக்கிறதோ என்று கேள்வி எழுந்துள்ளது, என்று பவார் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் அணில் தேஷ்முக்கை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருவதால் இன்று தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர் .
இந்த விவகாரத்தையே எப்படி எதிர்கொள்ளலாம், அமைச்சரை பதவி நீக்கம் செய்யலாமா என்று ஆலோசனை செய்ய உள்ளனர்.