ஜோத்பூர் ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து.. அதிகாலையில் அலறிய பயணிகள்.. உதவி எண்கள் அறிவிப்பு
மும்பை: மகராஷ்டிர மாநிலம் பாந்திரா ரயில் நிலையத்தில் இருந்து ஜோத்பூருக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் ஸ்லீப்பர் கோச்சின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் இல்லை. ரயில்வே உயர் அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ராவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு சூர்யனகரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயங்கி வருகிறது. இரண்டு முக்கிய நகரங்களுக்கு இடையே ஓடும் இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ரயிலில் பயணிகள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த போது திடீரென ரயில் பெட்டிகள் அதிர்ந்தன.

தடம்புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில்
அதோடு பயங்கர சத்தமும் கேட்டதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. அதிகாலை 3.27 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டது. தற்போது வரை சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதால் அந்த வழியாக செல்லும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. உடனடியாக ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

11 பெட்டிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக
ஜெய்பூரில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து வடக்கு ரயில்வேயின் பொது மேலாளர் உள்பட உயர் அதிகாரிகள் நிலமையை உன்னிப்பாக கணித்து வருகின்றனர். ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 11 பெட்டிகள் வரை பாதிக்கப்பட்டு இருப்பதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர். பயணிகளை பேருந்து மூலமாக அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதோடு உதவி எண்களையும் ரயில்வே அறிவித்துள்ளது.

உதவி எண்கள்
ஜோத்பூருக்கு 02912654979, 02912654993, 02912624125, 02912431646 என்ற எண்களையும் பலி மர்வாருக்கு 02932250324 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் பயணிகள் மற்றும் பயணிகளின் குடும்பத்தினர் தகவல் எதுவும் தேவைப்பட்டால் இந்த எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதிர்வு சத்தங்கள் கேட்டது
ரயில்வே உயர் அதிகாரிகள் விபத்து நடைபெற்ற இடத்திற்கு வருகை தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து பயணிகள் கூறுகையில், "ராஜஸ்தானின் மர்மார் சந்திப்பில் இருந்து ரயில் புறப்பட்ட 5 நிமிடங்களில் அதிர்வு சத்தங்கள் கேட்டது. அடுத்த 2-3 நிமிடங்களில் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது ஏதோ விபரீதம் நடந்துவிட்டதை உணர்ந்த நாங்கள் இறங்கி சென்று பார்த்தோம். அதில் ரயிலின் 8 ஸ்லீப்பர் கோச் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி கிடந்தன. அடுத்த 15-20 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் நிகழ்விடத்திற்கு வந்து விட்டது" என்றார்.












Click it and Unblock the Notifications