மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் உத்தவ் தாக்கரே தொடருவார்..ராஜினாமா பேச்சுக்கே இடம் இல்லை: சஞ்சய் ராவத்
மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவியில் உத்தவ் தாகக்ரே தொடருவார்; உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்வார் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Recommended Video
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், சிவசேனா தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முதலில் பாஜக ஆளும் குஜராத்திலும் பின்னர் அஸ்ஸாம் மாநிலத்திலும் அடைக்கலமாகி உள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் அரசு கவிழும் நிலை உருவாகி இருந்தது. இதனையடுத்து தற்போதைய சூழ்நிலைகள், மகாராஷ்டிரா சட்டசபை கலைப்பை நோக்கி செல்வதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருந்தார்.
இதையடுத்து முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 8 அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. பின்னர் மாலையில் பொதுமக்களுக்கு வீடியோ மூலம் உரையாற்றினார் உத்தவ் தாக்கரே. அதில், தாம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்; என் ராஜினாமா கடிதமும் ரெடியாகத்தான் இருக்கிறது. ஆனால் என் முகத்து நேரே நீங்க உங்க பதவியை ராஜினாமா செய்யுங்க என சொல்ல வேண்டும் என்றார்.
இதனிடையே தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி கோஷ்டி வலியுறுத்தி வருகிறது. இத்தகைய பரபரப்பான சூழலில் மும்பையில் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சிவசேனாவின் சஞ்சய் ராவத். அப்போது, முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யமாட்டார்; அவர் முதல்வர் பதவியில் தொடருவார். தேவைப்பட்டால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றார். மேலும் உத்தவ் தாக்கரேவை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து சந்தித்து ஆலோசனையும் நடத்தி வருகின்றனர்.