''எனக்கு எதிராக பேசுபவர்களை சிவசேனா ஊக்குவிக்கிறது''.. மத்திய அமைச்சர் நாராயண் ரானே குற்றச்சாட்டு!
மும்பை: தனக்கு எதிராக பேசுபவர்களை சிவசேனா ஊக்குவிக்கிறது என்றும் சிவசேனா ஆட்சியில் மக்கள் அவதிப்படுவதாகவும் மத்திய அமைச்சர் நாராயண் ரானே குற்றம்சாட்டினார்.
பா.ஜனதா மாநிலங்களவை எம்.பி.யும், மத்திய அமைச்சருமான நாராயண் ரானே மும்பையில் மக்கள் ஆசி யாத்திரை நடத்தியபோது மகாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்

மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
''இந்திய சுதந்திரம் பெற்ற ஆண்டு பற்றி கூட உத்தவ் தாக்கரேவுக்கு தெரியவில்லை. அதிகாரிகளிடம் கேட்கிறார். அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் அவரை அறைந்திருப்பேன்'' என்ற மத்திய அமைச்சர் நாராயண் ராணேவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனால் சிவசேனா தொண்டர்கள் ஆவேசம் அடைந்தனர். மாநிலம் முழுவதும் அவர்கள் மத்திய அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

அதிரடி கைது
மத்திய அமைச்சர் நாராயண் ராணே மீது மாநிலத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ரத்னகிரி போலீசார் நாராயண் ராணேவை கைது செய்தனர்.
இதனால் மகாராஷ்டிரா முழுவதும் பதற்றம் தொற்றிக் கொண்டது. பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. அதன்பின்னர் நாராயண் ராணே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சிவசேனா ஊக்குவிக்கிறது
இந்த நிலையில் தனக்கு எதிராக பேசுபவர்களை சிவசேனா ஊக்குவிக்கிறது என்று மத்திய அமைச்சர் நாராயண் ரானே கூறியுளளார். இது தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- இந்த பயணத்தின் போது ஒரு கெட்ட சகுனம் நடந்தது. என்னை ஜனாதிபதியாக நினைக்கும் சில அமைச்சர்கள் என்னை கைது செய்ய உத்தரவிட்டனர். அவர்கள் எனது யாத்திரையை நிறுத்த முயன்றனர். சிவசேனாவில் யார் எனக்கு எதிராக பேசினாலும் அவர்கள் பதவி உயர்வு பெற்றனர்.

பணியை தொடர்ந்து செய்வேன்
நான் எனது பணியை தொடர்ந்து செய்வேன். மகாராஷ்டிராவின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு தெரிவிப்பேன். மகாராஷ்டிரா அரசின் கருவூலத்தில் எதுவும் மிச்சமில்லை மக்கள் வாழ்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் என்னிடம் வந்து, அவர்கள் பாஜகவில் சேர விரும்புவதாக சொன்னால், அவர்களை என் கட்சிக்கு அழைத்துச் செல்லத் தயாராக இருக்கிறேன்.

எனது பொறுப்பு
இன்று நான் ஒரு மத்திய அமைச்சராக உங்கள் இடத்திற்கு வந்துள்ளேன். ஏற்றுமதி, ஜிடிபி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பது என் பொறுப்பு. நீங்கள் ஒரு தொழிலதிபராக மாறியிருந்தால், நான் உங்களுக்கு அனைத்து வளங்களையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று கொங்கன் மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு மத்திய அமைச்சர் நாராயண் ராணே கூறினார்.

பாஜக கண்டனம்
முன்னதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அடிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே 2018-ம் ஆண்டு பேசியதாக கூறப்படும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ''மத்திய அமைச்சருமான நாராயண் ரானேவுக்கு ஒரு நியாயம், உத்தவ் தாக்ரேவுக்கு ஒரு நியாயமா?'' என்று பாஜகவினர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மத்திய அமைச்சர் நாராயண் ரானேவும் இந்த குற்றச்சாட்டையே கூறி இருந்தது குறிப்பிடத்த்தக்கது.












Click it and Unblock the Notifications