மீண்டும் மத்திய அமைச்சரானார் பரம்பரை பாஜககாரர் பியூஷ் கோயல்
மும்பை: பியுஷ் வேதப்பிரகாஷ் கோயல் என்ற முழுப்பெயரை கொண்டவர் பியூஷ் கோயல்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 1964ம் ஆண்டு பிறந்தார். பியூஷ் கோயலின் தந்தை மறைந்த பிரக்ஷாக் கோயல், கப்பல் துறை அமைச்சராகவும், இரு முறை பா.ஜ.க தேசிய பொருளாளராகவும் இருந்துள்ளார்.

இவரது தாய் சந்திரகாந்தா கோயல் மும்பையில் இருந்து மகாராஷ்டிரா சட்டசபைக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பியூஷ் கோயல் தீவிர சமூக சேவையாளரான சீமாவை மணந்தார், அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்த பியூஷ் கோயல், மும்பை அரசு கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார். கோயல் கல்வியில் சிறந்து விளங்கியுள்ளார்
இவர் சார்ட்டர்ட் அக்கவுண்ட்டில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்தும் சாதனை படைத்துள்ளார். முக்கிய வங்கிகளின் வளர்ச்சி மற்றும் மேலாண்மைக்கு ஆலோசனை கூறும் வல்லுனராகவும் உள்ளார். பியுஷ் கோயல் இந்திய வணிகர் சம்மேளன நிர்வாகக் குழுவின் செயல் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இவர் நிதியமைச்சகத்தின் நிலைப்பாட்டு குழுவில் உறுப்பினராகவும் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராகவும் இருந்துள்ளார். கோயல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பாரதிய ஜனதா கட்சியில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். பாஜகவில் சேர்ந்தது முதல் பல தேர்தல்களில் பொறுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொருளாளராகவும் கோயல் பதவி வகித்துள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டின் போது மிகப்பெரிய திட்டமான நதிகள் இணைப்பு பணியை முன்னெடுக்க இந்திய அரசால் பியூஷ் கோயல் பரிந்துரைக்கப்பட்டார்.

தற்போது அவர் மராட்டிய மாநிலத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ராஜ்ய சபா உறுப்பினராக உள்ளார்.
இவர் கடந்த மோடியின் அமைச்சரவையில் மரபுசாரா மின்துறை அமைச்சராக பணியாற்றினார். கடந்த 2016ல் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட போது சுரங்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
பின்னர் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தின் போது ரயில்வே மற்றும் நிலக்கரி அமைச்சர் பதவியில் நியமிக்கப்பட்டார். சமீபத்தில் நிதியமைச்சர் பதவியிலிருந்து அருண்ஜேட்லிக்கு உடல்நக்குறைவு ஏற்பட்டதை அடுத்து பியூஷ் கோயல் வசம் நிதித்துறையும் ஒப்படைக்கப்பட்டது அவர் தான் கடந்த பிப்ரவரியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் தற்போது பியூஷ் கோயல் இரண்டாவது முறையாக மோடி அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications