10 சிவசேனா எம்எல்ஏ-க்களுடன் பேச்சுவார்த்தை.. மகாராஷ்டிராவில் ஆட்டம் மாறுகிதா? சஞ்சய் ராவத் ஆவேசம்
மும்பை: சிவசேனா கட்சியின் அதிருப்தி தலைவரான ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக இருக்கும் 10 எம்எல்ஏ-க்கள் தங்களுடன் பேசி வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். இதனிடையே, சிவசேனா கட்சியை மூத்த தலைவரும், முக்கிய அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
'அண்ணா' திமுக மாதிரி..'பாலசாகேப்' சிவசேனா கட்சியை தொடங்கும் அதிருப்தி கோஷ்டி! மும்பையில் 144 தடை!!
அசாமில் முகாம்
சிவசேனா கட்சியின் அதிருப்தி தலைவரான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களான 45க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களுடன் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் உள்ள ரேடிசன் ப்ளூ நட்சத்திர விடுதியில் முகாமிட்டுள்ளார். இதில், 40 எம்எல்ஏ-க்கள் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதனால், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது.
சிவசேனா போராட்டம்
இதனிடையே முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியுள்ள அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏக்னாந்த் ஷிண்டே அணியில் உள்ள எம்எல்ஏ தனஜி சாவந்தின் கட்சி அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கடிதம்
தொடர்ந்து அசாமில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்கள் முதலமைச்சர் உத்தவ் தக்கரே, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலிப் வால்சே பாட்டில், டிஜிபி ரஜ்னிஷ் சேத் மற்றும் அனைத்து காவல் ஆணையர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளனர். அதில், தங்கள் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மகாராஷ்டிரா அரசு வாபஸ் பெற்றுவிட்டது என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் தங்களை பழிவாங்க வகையில் குடும்பத்தினருக்கு சட்டவிரோத முறையில் போலீஸ் பாதுகாப்பு பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சஞ்சய் ராவத் பேட்டி
இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், இதுதான் சிவசேனா தொண்டர்களின் கோபம். தீ ஒருமுறை பற்றவைத்த பின் அதை அணைக்க முடியாது. சிவசேனா தொண்டர்கள் தெருக்களில் களமிறங்குவர். உத்தவ் தாக்கரே பதவியில் இருந்து ராஜினாமா செய்யமாட்டார். சிவசேனா இறுதி வரை போராடும். அவ்வளவு எளிதாக கட்சியை யாராலும் கைப்பற்ற முடியாது. பலரின் ரத்தத்தாலும், தியாகத்திலும் உருவாக்கப்பட்ட கட்சி. பணத்தால் ஒருபோதும் உடைக்க முடியாது. ஆடுகளை போல் கத்துவதை நிறுத்துங்கள். நேற்றிரவு நடைபெற்ற ஆலோசனையின் போது 10 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் எங்களுடன் பேசினார்கள். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வாருங்கள். யார் வலிமையோடு இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்று ஆவேசமாக தெரிவித்தார்.