இலங்கை கொள்ளையர்கள் தொடர் தாக்குதல்- 4 தமிழக மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு!
நாகை: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கொள்ளையர்கள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நாகை மீனவர்கள் 4 பேரை இந்த கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டி ரூ4 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நாகை ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த வசந்தபாலன், நிர்மல், மணிகண்டன், தில்லைநாதன் ஆகிய 4 மீனவர்களும் நேற்று பிற்பகல் நாகையில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்கொள்ளையர்கள் இரண்டு படகில் 8 பேர் வந்து திடீரென்று தாக்குதல் நடத்தினர்.
இந்தியாவின் 73வது குடியரசுத் தினம்.. இன்று என்னென்ன கொண்டாட்டங்கள் நடக்கும்? - முழு விபரம்!
அரிவாள் வெட்டு, கொள்ளை
தமிழக மீனவர்களின் படகில் ஏறி அவர்களை அரிவாளால் கண்மூடித்தனமாக வெட்டினர். இதில் மணிவண்ணன், வசந்தபாலன், நிர்மல், தில்லைநாதன் ஆகிய 4 மீனவர்களும் படுகாயமடைந்தனர். மேலும் ரப்பர் குண்டுகளாலும் மீனவர்களை அந்த கும்பல் தாக்கியது. பின்பு படகில் இருந்த ரூ60 ஆயிரம் மதிப்புடைய மீன்கள், 2 செல்போன்கள், ஜிபிஎஸ் கருவி, வலைகள் ,படகு இன்ஜின் உள்ளிட்ட ரூ4 லட்சம் மதிப்புடைய பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து கொண்டு சென்றுவிட்டனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை
காயம்பட்ட 4 மீனவர்களும் அவசரம் அவசரமாக அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து அங்கிருந்து கொண்டு வரப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றனர். படகின் உரிமையாளர் மகன் வசந்தபாலன்னுக்கு கை மற்றும் உடலில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. மீனவர் நிர்மலுக்கும் காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர் தாக்குதல்களால் பதற்றம்
தில்லைநாதன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருக்கும் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு நாளில் அடுத்தடுத்து இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குவது நாகை மாவட்ட மீனவர் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திட்டமிட்ட சதியா?
இலங்கை கடற்கொள்ளையர்கள் என்ற பெயரில் இலங்கை கடற்படையினர்தான் இந்த தாக்குதலில் ஈடுபடுவதாகவும் மீனவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக தமிழகம்- ஈழத் தமிழ் மீனவர்கள் பிரச்சனையை சர்வதேச விவகாரமாக்க இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிரமாக முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் மீது கொள்ளையர்கள் என்ற போர்வையில் மர்ம கும்பல் தாக்குதல் நடத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.