தீரன் பட பாணியில் வீடுகளில் குறியீடு.. நடுங்கும் நாகை மக்கள்.. கொடூர கொள்ளையர்களின் நடமாட்டமா?
நாகை: நாகை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடச் செல்லும் மர்மநபர்கள் அந்த வீடுகளில் No என எழுதி வைத்துவிட்டு செல்வதால் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே உள்ள திருப்பூண்டி ஆசாத் நகர் பகுதியில் கணவர் ஜியாவ்தீன்- மனைவி சமீமா. இவர்கள் இருவரும் வீட்டை பூட்டி விட்டு தனது மகள் வீட்டிற்கு வெளியூர் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மர்ம நபர்கள் வீட்டின் பின்புறம் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் காலையில் வந்து பார்க்கும் போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
கல்வான் விவகாரம்.. நடிகர் பிரகாஷ் ராஜை தொடர்ந்து சீனில் வந்த நடிகை நக்மா.. பாஜக மீது கடும் தாக்கு
ரூ 5 ஆயிரம் ரொக்கம்
இதில் ரூ. 5 ஆயிரம் ரொக்கமும் விலை உயர்ந்த வாட்சுகளும் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணமும் காணவில்லை என கூறப்படுகிறது. மேலும் கை ரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு செய்தனர். இதனையடுத்து நாகை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், கீழையூர் காவல் ஆய்வாளர் ரேவதி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பரபரப்பு
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு மர்ம நபர்கள் வீட்டை நோட்டமிட்டு 'நோ' என்று குறியீடு வைத்து சென்றுள்ளனர். பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து திருப்பூண்டி பகுதிகளில் தொடர் திருட்டு நடைபெறுவதால் திருப்பூர் பகுதியில் புற காவல் நிலையம் அமைக்க வேண்டும் என திருப்பூண்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறியீடு
இந்த குறியீடு திருடுபவர்களுக்கான குறியீடா என்பது குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளனர். தீரன் அதிகாரம் ஒன்று எனும் திரைப்படத்தில் பவாரியா கொள்ளையர்களை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. வியாபாரிகள் போல் ஒவ்வொரு தெருக்களிலும் சுற்றும் கொள்ளையர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளில் நோட்டமிடுவர்.
நோட்டமிடும் கொள்ளையர்கள்
அங்கு வீட்டில் யார் இருக்கிறார்கள், எத்தனை பேர் இருக்கிறார்கள் என பார்ப்பர். இந்த வீட்டில் கொள்ளையடித்தால் சிக்கி கொள்ள மாட்டோம் என்ற சூழல் இருந்தால் அந்த வீடுகளில் இவர்கள் குறியீட்டை வரைந்து வைத்துவிட்டு செல்வார்கள். இரவு நேரங்களில் கொள்ளை கும்பலை சேர்ந்த வேறு குழுக்கள் வீடுகளில் குறியீடு இருக்கின்றனவா என பார்க்கும். அவ்வாறு குறியீடு இருந்தால் அந்த வீட்டில் துணிந்து இறங்கும். யார் தடுத்தாலும் அவர்களை மிக கொடூரமான முறையில் கொன்று கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றுவர்.
திருச்சி மாவட்டத்தில் நடந்த சம்பவம்
இது போல் கடந்த 2019ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் துறையூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள பெரியார் நகரில் வசித்து வருபவர் முகமது ரஃபி. வழக்கறிஞரான இவரது வீட்டின் சுவர்களில் ஏதோ குறியீடுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அது போல் பூட்டிக் கிடக்கும் வீடுகளிலும் அது போன்ற ஒரு குறியீடுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து புகார் கொடுக்கப்பட்டிருந்தது. நோட்டமிட்ட வீடுகள் கொள்ளையடிக்க ஏதுவானவை என்ற அடையாளத்தை தங்கள் கும்பலுக்கு காட்டுவதற்காகவே இந்த குறியீடு போடப்படுகிறது. முன்புறச் சுவற்றில் இது போன்ற குறியீடுகளை இரவு நேரத்தில் வரும் பேட்ச் அடையாளம் கண்டு அந்த வீட்டுக்குள் எந்த வித அச்சமும் இன்றி தைரியமாக உள்ளே இறங்குவர். மீறி அந்த வீட்டில் உள்ளவர்கள் எதிர்த்தால் ஒரே வெட்டாக வெட்டிவிட்டு ஈவுஇரக்கமே இல்லாமல் சென்றுவிடுவர்.