புலனாய்வுக்கான மத்திய அரசு விருது பெற்ற.. பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
நாகர்கோவில்: சிறந்த புலனாய்வுக்காக மத்திய அரசின் விருது பெற்ற போலீஸ் பெண் இன்ஸ்பெக்டரின் நாகர்கோவில் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் கண்மணி. இவரது கணவர் சேவியர் பாண்டியன். அரசு வழக்கறிஞர். இவர் நீதித் துறையின் குற்றவியல் பிரிவு உதவி இயக்குனராக செயல்பபட்டு வருகிறார். இந்த தம்பதி நாகர்கோவில் கீழ ராமன்புதூர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் புகார் சென்றது. அதுதொடர்பான விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக சேகரித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை திடீரென்று நாகர்கோயில் லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் பீட்டர் ஜெரால்ட் தலைமையிலான அதிகாரிகள் அவரது வீட்டில் அதிரடி சோதனையிட்டனர். பீரோ உள்பட வீட்டின் அனைத்து பகுதிகளிலும் அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, தங்கநகைகள், லட்சக்கணக்கில் ரொக்கப் பணம், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது .
போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி சில ஆண்டுகள் நாகர்கோயிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றினார். 2001ஆம் ஆண்டின் சிறந்த புலனாய்வு அதிகாரியாக மத்திய அரசால், தேர்வு செய்யப்பட்டு விருது வாங்கினார். தற்போது இவரது வீட்டிலேயே லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.