அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு.. காலையிலேயே அதிர்ச்சி கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை!
நாமக்கல்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக மதுரை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் நாமக்கல் மாவட்டத்தில் 24 இடங்களிலும், மதுரையில் ஒரு இடம், திருப்பூரில் ஒரு இடம் என சோதனை நடைபெற்று வருகிறது.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 315 சதவிகிதம் சொத்துக் குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.72 கோடி சொத்து சேர்த்துள்ளதாக கேபிபி பாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தனது பெயரிலும், தனது மனைவி மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.