‘சங்கி பிரின்ஸ்’ கைது.. அதிகாலையில் பாஜக நிர்வாகி பிரவீன்ராஜை தட்டித் தூக்கிய சைபர் கிரைம் போலீசார்!
நாமக்கல்: X சமூக வலைதளத்தில் 'சங்கி பிரின்ஸ்' என்ற பெயரில் இயங்கி வந்த பாஜக நிர்வாகி பிரவீன் ராஜ் இன்று அதிகாலையில், சைபர் கிரைம் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி குறித்து இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி பிரவீன் ராஜ் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவின் இளைஞரணியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், இளைஞரணியின் சமூக ஊடக பொறுப்பாளராகவும் செயல்பட்டு வரும் பிரவீன் ராஜ், கரூர் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கரூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக நிர்வாகி பிரவீன் ராஜின் கைது நடவடிக்கையை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். திமுக அரசு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல விஷயங்களில் தோல்வி அடைந்ததை மறைக்கவே திமுக அரசை விமர்சிக்கும் பிரவீன் ராஜை கைது செய்துள்ளனர் என பாஜகவினர் விமர்சித்துள்ளனர்.
கைது நடவடிக்கை தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரவீன் ராஜ், "அதிகாலை 2 மணிக்கு கதவை தட்டி, பிறகு கதவை உடைக்க முற்படும் சிலர், கேட்டால் சைபர் கிரைம் என்கிறார்கள். ஆனால் தாங்கள் காண்பிக்கும் ஐடி கார்டை உள்ளூர் மக்கள் ஃபோட்டோ எடுப்பது குற்றம் என சொல்லி மிரட்டுகிறார்கள். புரோட்டோகால் படி உள்ளூர் போலீஸும் உடன் இல்லை. வீழ்வேன் என நினைத்தாயோ?" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications