நாமக்கல் அருகே பைனான்சியர் கடத்திக் கொலை! கடைகள் அடைக்கப்பட்டு தீவிரமடையும் போராட்டம்!
நாமக்கல்: நாமக்கல் அருகே பள்ளிப்பாளையத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட நிதி நிறுவன அதிபர் கவுதம் சேலம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் நூற்றுக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது.

நிதி நிறுவன அதிபர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள பாதரை செட்டுக்காரன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கவுதம். 36 வயதாகும் இவர் சொந்தமான நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணித் தலைவராகவும் இருந்திருக்கிறார். இதனிடையே 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் தனது நிதி நிறுவனத்தை இரவு 9.30 மணிக்கு பூட்டிய அவர் தனது டூவிலரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

மிளகாய் பொடி
அப்போது இருள் சூழ்ந்த பகுதியில் மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபர்கள் பைனான்சியர் கவுதம் கண்களில் மிளகாய் பொடியை தூவியுள்ளனர். இதில் நிலைகுலைந்து போன கவுதமை அப்படியே தூக்கிச் சென்று காரில் வைத்து கடத்திச் சென்றது அந்த மர்ம கும்பல். இது தொடர்பாக கவுதம் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பள்ளிப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.

சடலமாக மீட்பு
கவுதம் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நிர்வாகி என்பதால் இந்த விவகாரத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்ட காவல்துறை தனிப்படைகளை அமைத்து கவுதமை மீட்கும் பணிகளை முடுக்கி விட்டிருந்தது. இந்நிலையில் சேலம் சங்ககிரி அருகே வைகுந்தம் ஏரிக்கரையில் கத்திக்குத்து காயங்களுடன் கவுதம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கவுதமை கடத்திச் சென்று கொலை செய்தது யார் என்பதை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கடை அடைப்பு
இதனிடையே கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் நூற்றுக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றத்தை தணிக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications