பாஜக நினைக்கிறதுல தப்பில்ல! - சசிகலா பதிலால் பாஜகவினர் குஷி.. என்ன சொன்னார்னு கவனிச்சீங்களா?
நாமக்கல்: தமிழ்நாட்டில் பாஜக வளர நினைப்பதில் தவறேதும் இல்லை என்றும், அதிமுக பாஜகவுடன் இணைந்து செயல்படுவது கால சூழல் என்று சசிகலா தெரிவித்து உள்ளார்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், "இடைக்கால மனு கொடுத்ததில் இந்த தீர்ப்பு வந்துள்ளது. இதன் முழு விவரங்களை தெரிந்துகொண்டு மேல்முறையீடு செய்வோம்.

தொண்டர்களே பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும்
எங்களுடைய இயக்கத்திற்கு கழகத் தொண்டர்கள் தான் அடித்தளம். புரட்சித்தலைவர் உருவாக்கிய சட்டத்திட்ட விதிகள் அடிப்படையில் கடைக்கோடி தொண்டர்கள் தான் ஒரு பொதுச் செயலாளரை முடிவு செய்ய முடியும். யார் பொதுச்செயலாளர்? என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க முடியும். இந்தியாவில் எந்த கட்சியிலும் இந்த விதி இல்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட விதிகளில் இந்த ஷரத்து உள்ளது.

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த விதி
எம்.ஜி.ஆரை பொருத்தவரை அவர் பணியாற்றிய இயக்கத்தில் இருந்து வெளியேற்றி தனியாக கட்சியை தொடங்கும் போது நான்கு ஐந்து நபர்கள் சேர்ந்து யாரையும் நீக்கிவிட கூடாது என்பதற்காகவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டத்திட்ட விதிகளில், கழகத் தொண்டர்களின் ஆசைப்படிதான் ஒரு பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்பதை கொண்டு வந்தார். மூன்றாவது தலைமுறையாக அதிமுகவில் அதுதான் தொடர்ந்து வருகிறது. தொண்டர்கள் விருப்பத்தின்படி எல்லாம் நிறைவேறும்." என்றார்.

கட்சியின் நிலைமை எல்லோருக்கும் தெரியும்
தற்போது அதிமுகவின் சூழல் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, "இப்போது இருக்கும் நிலைமை என்னவென்று அனைவருக்கும் தெரியும். தொடர் தோல்விகளில் இருந்து அதிமுகவை மீட்டெடுத்த ஜெயலலிதா, நூறு ஆண்டுகள் ஆனாலும் அண்ணா திமுகவை அழியாமல் காக்கவும் ஆட்சி பொறுப்பேற்கவும் பாடுபடவேண்டும் என சொல்லி இருக்கிறார். அதை நிறைவேற்றுவது எனது கடமை. என்னை பொறுத்தவரை வருங்காலங்களில் நிச்சயம் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும். தமிழக மக்களுக்காக பாடுபடும்." எனத் தெரிவித்தார்.

பாஜக நினைப்பதில் தவறில்லை
பாஜகவின் கட்டுப்பாட்டின்கீழ் அதிமுக உள்ளதா சசிகலாவிடம் செய்தியாளர்கள் வினவினர். அதற்கு விளக்கமளித்த அவர். "பாஜக தமிழ்நாட்டில் வளர நினைப்பதில் தவறு இல்லை. ஒரு கட்சியை ஆரம்பித்தால் அவர்கள் வளர நினைக்க ஆசைப்படுவது சகஜம்தான். அதற்கு நாம் எதுவும் சொல்ல முடியாது. கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலேயே செயல்படமுடியும்.

என்னோட எக்ஸ்பீரியன்ஸ்ல சொல்றேன்
எனது 33 ஆண்டு ஆண்டுகால அனுபவத்தில் சொல்கிறேன். இதுவும் கடந்து போகும். நான் கொங்கு மண்டலத்தில் தான் இருக்கிறேன். கட்சி தொண்டர்களை சந்தித்து வருகிறேன். எம்ஜிஆர் ஜெயலலிதாவின் நிலைப்பாடும் என்னவாக இருந்ததோ என்னுடையதும் அதுவாகவே இருக்கும். ஏழை எளிய மக்களுக்காகவே அதிமுக உருவாக்கப்பட்டது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதன்படியே செயல்பட்டார்கள். நானும் அதேபோன்றுதான் செயல் படுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications