அவங்க கொடுக்க ரெடி.. தங்கமணி தான் விட்டுக் கொடுத்தார்! எவ்ளோ நல்ல மனசு பாருங்க.. உருகும் ர.ர.க்கள்!
நாமக்கல் : அதிமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தங்கமணிக்கு எந்த பதவியும் வழங்கவில்லை என்பதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை அவரே விட்டுக் கொடுத்ததாக கூறுகின்றனர் கொங்கு மண்டல சீனியர் நிர்வாகிகள்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகி வருகிறது உட்கட்சி நிகழ்வுகள்.
இதனிடையே எடப்பாடி பழனிசாமுக்கு எதிராக போர் கொடி தூக்கி உள்ளார் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம். நீதிமன்றம் வரை சென்றும் பொதுக்குழுவை நிறுத்த முடியாத நிலையில், நினைத்ததை முடித்தார் இபிஎஸ்.

அதிமுக பொதுக்குழு
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் புதிய நிர்வாகிகள் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அந்தப் பட்டியலின்படி அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் கேபி முனுசாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள்
அதேபோல் தலைமை நிலைய செயலாளராக எஸ்பி வேலுமணி எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதற்கு அடுத்ததாக வெளியிடப்பட்ட பட்டியலை முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு தனபால் சி.வி சண்முகம் கேபி அன்பழகன் கேடி ராஜேந்திர பாலாஜி காமராஜ் கடம்பூர் ராஜு ராஜன் செல்லப்பா பாலகங்க ஆகியோர் புதிய அமைப்புச் செயலாளர் அறிவிக்கப்பட்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி
அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த நிர்வாகிகள் பட்டியல் செல்லாது எனவும் அவர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்குகிறேன் என அதிரடி அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் ஓபிஎஸ். இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியலில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என கூறப்பட்டது. குறிப்பாக செங்கோட்டையன், தங்கமணி, எம் ஆர் விஜயபாஸ்கர், ஆகியோர் புறக்கணிக்கப்பட்டதாகவும் இதனால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாக யூகங்கள் வெளியாகின.

தங்கமணி
குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகியும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிக நெருக்கமாக இருந்த தங்கமணிக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி, துணை பொது செயலாளர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த பட்டியலில் தங்கமணியின் பெயர் இடம் பெறவில்லை எனவும் இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக அடுத்தடுத்து செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி தங்கமணிக்கு பதவி வழங்க முன் வந்ததாகவும் ஆனால் அவரே வேண்டாம் என மறுத்து விட்டதாக கூறுகின்றனர் நாமக்கல் ரத்தத்தின் ரத்தங்கள்.

விட்டுக் கொடுத்தாரா?
இதுகுறித்து நாமக்கல்லை சேர்ந்த சில நிர்வாகிகளும் பேசியபோது ஏற்கனவே அதிமுகவில் கொங்கு மண்டல நிர்வாகிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக புகார்கள் உள்ளன. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எஸ்பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் நெருக்கமானவர்கள் எனக் கூறப்படும் நிலையில் தற்போது அதிமுகவின் தலைமை பதவிகளை தங்கமணிக்கு வழங்கினால் கூடுதல் எதிர்ப்பாக அமையும் என்பதாலும் தென்மாவட்டங்களில் ஓபிஎஸ்ஐ நீக்கிவிட்டு கொங்கு மண்டல நிர்வாகிகளுக்கு எடப்பாடி முக்கியத்துவம் தருகிறார் என்ற அதிருப்தி குரல் எழும். எனவே தனக்கு பதவி வேண்டாம் என நாமக்கல் தங்கமணி பெருந்தன்மையோடு மறுத்துவிட்டதாகவும், இதையடுத்தே தென் மாவட்டங்களை சேர்ந்த குறிப்பாக முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு தலைமை பதவிகளை விட்டுக் கொடுத்ததாக கூறுகின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications