நாமக்கல் கலெக்டர் உமாவுக்காக கண்ணீர் விட்ட திருநங்கைகள்.. கலங்கிய ஆட்சியர்! நெகிழ்ச்சி சம்பவம்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த உமா, இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை பிரிய மனமின்றி திருநங்கைகள் கண்ணீர் விட்டனர். அவர்களின் அன்பால் ஆட்சியர் உமாவும் கண் கலங்கினார். இச்சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக, உமா கடந்த 2023-ஆம் ஆண்டில் பதவி ஏற்றார். நாமக்கல் மாவட்டத்தின் 16 வது மாவட்ட ஆட்சியராக அவர் பொறுப்பு வகித்தார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உமா, அடிப்படையில் ஒரு மருத்துவர். கடந்த 1995-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் எம்டி முடித்த அவர், தமிழக அரசின் மருத்துவத் துறையில் அதிகாரியாக பணியாற்றினார்.

மாநில தேர்வில் ஐஏஎஸ் ஆனவர்
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி இருந்தார். தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டத்தின், திட்ட இயக்குநராக பணியாற்றி உள்ளார். மருத்துவத் துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். சுறுசுறுப்பாகவும் பணிகளை நேர்த்தியாகவும் செய்து முடிப்பதில் வல்லவர். இதனால் பல்வேறு உயரிய பதவிகள் உமாவை தேடி வந்தன. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாநில தேர்வின் மூலம் சிறப்பு பிரிவின் கீழ் ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
தமிழகத்தில் அரசு மருத்துவர் ஒருவர் சிறப்பு பிரிவின் கீழ் ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று காலகட்டத்தில் மாநில அளவில் சென்னை வார் ரூம் கண்காணிப்பாளராக உமா திறம்பட செயல்பட்டார். தமிழக அரசு கொரோனா பரவலைத் திறம்பட கட்டுப்படுத்துவதில் உமா ஐஏஎஸ் முக்கிய பங்கு வகித்தார்.
சிறப்பான பணி
முன்னதாக தூத்துக்குடி, நெல்லை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர், தேசிய நலவாரிய குழும இணை இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு உயர் பொறுப்புகளையும் வகித்துள்ளார் உமா. மேலும் திருவள்ளூர் பயிற்சி ஆட்சியர், பழனி சார் ஆட்சியர், ராணிப்பேட்டை துணை ஆட்சியர் என பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகப் பணிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

உமா நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின்னர், பம்பரம் போல சுற்றிச் சுற்றி ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இதனால் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுகளைப் பெற்று வந்தார். திருநங்கைகளின் நல்வாழ்வுக்காகவும் பல்வேறு பணிகளைச் செய்துள்ளார் நாமக்கல் ஆட்சியராகப் பணியாற்றிய உமா.
நாமக்கல் கலெக்டர்
இந்நிலையில், உமா, தமிழக அரசின் சிறப்பு திட்ட அமலாக்கத் துறையின் கூடுதல் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக துர்கா மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து விடைபெற்றுச் செல்ல இருக்கிறார் உமா.
உமா பிரியாவிடை பெற்றுச் செல்லும் நிலையில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், திருநங்கைகள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. அதில் நீங்களே மீண்டும் இங்கு ஆட்சியராக வரவேண்டும் எனவும், எங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துள்ளீர்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றும் திருநங்கைகள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருநங்கைகள் நெகிழ்ச்சி
மேலும், ஆட்சியர் உமா உடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். திருநங்கைகள், குடியிருப்பு, சுயதொழில் என தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி நீங்கள் தாய் போல எங்களை பார்த்து கொண்டீர்கள் என்று கண்ணீர் விட்டு அழுதனர். உடனே நீங்க அழாதீங்க என்று கூறியபடியே ஆட்சியர் உமாவும் கண் கலங்கினார்.
திருநங்கைகள் சிலர் கையெடுத்துக் கும்பிட்டு, அவரது நெற்றியில் விபூதி இட்டு எங்கு சென்றாலும் நன்றாகப் பணியாற்றுவீர்கள் என வாழ்த்தினர். அவர்களுக்கு கலெக்டர் உமா நெகிழ்ந்து போய் கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். இந்த உருக்கமான காட்சி, அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications