ஹ்ம்ம் தூக்குங்க.. மோடி எதிர்பார்த்த பெரிய அறிவிப்பு.. 26/11 தீவிரவாதியை நாடு கடத்த டிரம்ப் அனுமதி
நியூயார்க்: 2008 மும்பை தீவிரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட தஹவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டார். வெள்ளை மாளிகையில் இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியுடன் கூட்டாக செய்தியாளர் சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள், பின்லேடன் மூலம் விமானம் வைத்து 2001 செப்டம்பர் மாதம் 11ம் தேதி தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதலை இப்போதும் உலகம் 911 என்று நினைவு கூறுகிறது. ஆனால் அதைவிட பல நூறு மடங்கு கொடூரமான தாக்குதலை இந்தியா சமாளித்தது. கடந்த 2008 நவம்பர் மாதம் 26ம் தேதி லஸ்கர் இ தொய்பா மூலம் மும்பையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் இந்திய வரலாற்றில் மிக மோசமான தாக்குதல் ஆகும்.

மோசமான மும்பை தாக்குதல்
லஸ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த 10 ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள், கடல் வழியாக, மீனவர்களை கொன்றுவிட்டு, படகுகளை திருடி மும்பைக்கு வந்தனர். இவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து நவம்பர் 26ம் தேதி மாலை தங்கள் ஆபரேஷனில் களமிறங்கினர். இவர்கள் முதலில் தாக்குதல் நடத்தியது, மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில்தான். இந்த தாக்குதலில் 58 பேர் பலியானார்கள். 120 பேர் காயம் அடைந்தனர். அஜ்மல் கசாப் வழிநடத்திய இந்த தாக்குதலை மூன்று தீவிரவாதிகள் நடத்தினர். இந்த தாக்குதல் 90 நிமிடம் நீடித்தது.
இந்த தாக்குதல் நடந்த இரண்டு நிமிடத்தில் மும்பையில் முக்கியஸ்தர்கள் வெளிநாட்டினர் வசிக்கும் நாரிமன் இல்லத்திலும், லெபர்ட் கஃபோவிலும் தாக்குதல் நடத்தினார்கள். 25 பேர் வரை இந்த தாக்குதலில் பலியானார்கள். இதில் இஸ்ரேலை சேர்ந்த 4 பேர் பலியானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராணா தாக்குதல்
அதன்பின் தீவிரவாதிகள் வெளிநாட்டினர் வசிக்கும் பெரிய ஹோட்டல்களில் தாக்குதல் நடத்தினர். தாஜ் ஹோட்டல், ஓரியண்ட் ஹோட்டல் ஆகிய ஹோட்டல்களில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் தீவிரவாத எதிர்ப்பு படை ஸ்பெஷலிஸ்ட் ஹேமன்த் கார்கரே உள்ளிட்ட முக்கிய ராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்டனர். இதில் தாஜ் ஹோட்டலிலும், ஓரியண்ட் ஹோட்டலிலும் நடந்த தாக்குதல்தான் மிகப்பெரிய போராட்டமாக மாறியது. ஹோட்டலுக்கு உள்ளே பிணைக்கைதிகள் நூற்றுக்கணக்கில் பிடித்து வைக்கப்பட்டு இருந்தனர். பலர் இதில் வெளிநாட்டினர். பாதுகாப்பு படை வீரர்கள் மூன்று நாட்களாக இவர்களை மீட்கவும், தீவிரவாதிகளை சுட்டுக் கொல்லவும் போராடினார்கள்.
இந்த தாக்குதலில் தஹவ்வூர் ராணாவின் பங்கு முக்கியமானது. இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் நுழைய வழி போட்டுக்கொடுத்தவர், இதற்கான பிளான்களை வகுக்க காரணமாக இருந்தவர் தஹவ்வூர் ராணா என்பது குறிப்பிடத்தக்கது.
ராணா நாடு கடத்தல்
2008 மும்பை தீவிரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட தஹவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டார். வெள்ளை மாளிகையில் இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியுடன் கூட்டாக செய்தியாளர் சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தஹவ்வூர் ராணா இந்தியாவுக்குத் திரும்புவார், அங்கு அங்கே அவர் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார்" என்று டிரம்ப் எச்சரித்தார். பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய குடிமகன் தஹவ்வூர் ராணா, தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவை ஆதரித்ததற்காக அமெரிக்காவில் தண்டிக்கப்பட்டார். அவரை நாடு கடத்த வேண்டும் என்பது இந்தியாவில் இருந்து நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கை. இந்தியாவில் அவர் மீது வழக்கு தொடுக்கப்படும்.. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஹவ்வூர் ராணா குறித்து பிரதமர் மோடி பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications