செல்ஃபி புள்ளை! மலை பூங்காவின் "கேமராவை" தூக்கிய கரடி.. ஒன்னு ரெண்டு இல்ல 400 போட்டோ எடுத்து அசத்தல்
அமெரிக்காவில் உறைபனி காலகட்டம் தொடங்கியுள்ளதால் கரடிகள் மாற்று உணவை தேடி மக்களின் இருப்பிடத்தை நோக்கி வருகின்றன.
நியூயார்க்: அமெரிக்காவின் மலை பூங்கா ஒன்றில் பழுப்புநிற கரடிகள் சுமார் 400 செல்ஃபிகளை எடுத்து தள்ளியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் போல்டரில், திறந்தவெளி மற்றும் மலை பூங்கா ஒன்று இருக்கிறது. இந்த மலைப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சில அரிய வகை உயிரினங்களும் கூட வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், இந்த உயிரினங்களால் உள்ளூர் மக்கள் பலர் அடிக்கடி சில இடர்பாடுகளை எதிர்கொள்வதாக கூறியுள்ளனர். அதேபோல சில வேட்டை சம்பவங்களும் இந்த உயிரினங்களின் எண்ணிக்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.
எனவே பூங்கா நிர்வாகம் சார்பில் இந்த உயிரினங்களை கண்காணிக்க 9 கேமிராக்கள் சில முக்கியமான இடங்களில் வைக்கப்பட்டன. இந்த கேமிராக்களின் முன்னால் விலங்குகள் வரும்போது கேமிரா தானாக இதனை புகைப்படம் எடுக்கும். அதேநேரம் சுமார் 10-30 வினாடிகள் வரை வீடியோவரையும் எடுக்கும். மட்டுமல்லாது இரவு நேரத்தில் விலங்குகளின் நடமாட்டத்தை துல்லியமாக கணிக்க அகச்சிவப்பு ஒளியை பயன்படுத்தி இந்த கேமிரா போட்டோவை எடுக்கும்.

400 செல்ஃபி
இந்த புகைப்படங்களை கொண்டு விலங்குகளின் வாழ்வியல், உணவு பழக்கவழக்கம், அது சந்திக்கும் இடர்பாடுகள், மனித நடமாட்டம் போன்றவற்றை எளிதாக கண்டுபிடித்து விடலாம். அந்த வகையில் இந்த ஒன்பது கேமிராக்களையும் சமீபத்தில் பூங்கா நிர்வாகம் சரிபார்த்தது. அதில் மொத்தம் 580 படங்கள் பதிவாகியிருந்தன. இதில் 400 படங்கள் கரடியினுடையது மட்டுமே. அதாவது இந்த கரடிகள் ரகசிய கேமராவை கண்டுபிடித்துள்ளன. இரவில் இந்த கேமரா முன்னால் வந்து நின்று கேமராவையே உற்று நோக்கியுள்ளன. இதானல் இந்த கேமராவும் தன் இஷ்டத்திற்கு படத்தை எடுத்து தள்ளியிருக்கிறது.

உணவு
பொதுவாக கரடிகள் அனைத்துண்ணிகளாகும். எனவே உணவு தேடி இது போகாத திசையே இல்லையென்று சொல்லலாம். அந்த அளவுக்கு கரடிகள் ஒரு தேர்ந்த ஊர் சுற்றியாகும். இருப்பினும் இந்த கரடிகளின் பிரதான உணவு மீனும், தேனும்தான். கருப்பு கரடிகளுக்கு தேன் என்றால் உயிர். அதேபோல அமெரிக்காவில் உள்ள பழுப்பு கரடிகளுக்கு சாலமன் மீன் என்றால் உயிர். இது ஒரு நாளைக்கு சுமார் 40 கிலோவுக்கும் அதிகமாக மீன்களை மட்டுமே உண்ணும். ஆனால் இது குளிர்காலத்தின் உச்சி என்பதால் நீர் நிலைகள் உறைபனியால் மூடப்பட்டிருக்கும். எனவே கரடிகள் தங்களது மாற்று உணவை தேடி அலைந்து திரியும்.

வேட்டை
இப்படிதான் இந்த கேமிரா இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது என பூங்கா அதிகாரிகள் கூறுகின்றனர். அதேநேரத்தில் இந்த கரடிகளின் ரோமத்திற்காகவும், தோலுக்காகவும், அதனுடைய மருத்துவ குணம் கொண்ட கனயத்திற்காகவும் அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான கரடிகள் வேட்டையாடப்படுவதாக சொல்லப்படுகிறது. இது அமெரிக்காவில் சட்டப்பூர்வமானதும் கூட. எனவே கரடி வேட்டைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் தொடர்ந்து விலங்கியல் ஆர்வளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தாக்குதல்
அதேபோல இந்த கரடிகள் நடத்தும் தாக்குதலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். காட்டில் டிரக்கிங் செல்பவர்கள் இது போன்று கரடி தாக்குதலுக்கு ஆளாகின்றனர். கரடியின் நகங்கள் மிகவும் கூர்மையாகவும், நீளமாகவும் இருப்பதால் இதன் மூலம் தாக்குதல் நடத்தினால் அந்த காயம் சரியாவதற்கு நீண்ட நாட்கள் ஆகும். ஏனெனில் இதன் நகங்களில் சகதி, மண் நிறைந்திருக்கும். இதில் அதிக பாக்டீரியாக்கள் இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எப்படி இருப்பினும் மனிதர்களை விட கரடிகள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்று விலங்கியர் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications