ஆசிரியை டூ மிஸஸ் வேர்ல்ட்! சாதித்த 32 வயது பெண்.. 21 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிற்கு மீண்டும் மகுடம்
நியூயார்க்: கடந்த 21 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் 'திருமதி உலக அழகி' பட்டத்தை இந்தியா வென்றிருக்கிறது. இந்தியாவின் சர்கம் கவுசல் எனும் 32 வயது பெண்மணி இப்பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட இவர் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் கடற்படை வீரராவார்.
இந்நிலையில் இவருக்கு திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை இருந்து வந்துள்ளது. உண்மையில் திருமணத்திற்கு முன்னர் உலக அழகி போட்டியில் பங்கேற்க ஆசைப்பட்டிருந்தார்.

பின்னணி
அது நடக்காமல் போகவே ஏமாற்றத்துடன் இருந்த அவருக்கு அவரது கணவர் உத்வேகமூட்டியுள்ளார். இதனையடுத்து திருமதி உலக அழகி போட்டிக்கு இவர் தயாராகி இருக்கிறார். கணவரும் நண்பர்களும் இவருக்கு ஆதரவாக இருந்தாலும், குடும்பத்திற்குள் இருந்தே சில எதிர்மறையான கருத்துக்கள் வெளிவர தொடங்கியுள்ளன. ஏனெனில் இந்த போட்டிக்கு தயாராக இவர் மேற்கொண்ட முயற்சிகள் இவரின் இயல்பு வாழ்க்கையை பாதித்தன. வேலைக்கு அடிக்கடி விடுப்பு எடுப்பது, குழந்தையை பராமரிக்க நேரத்திற்கு வீட்டிற்கு வராமல் போனது என பல விஷயங்களில் குடும்பத்தினர் இவருக்கு எதிராக பேசியுள்ளனர். ஆனால் அதையும் மீறி இவர் தொடர்ந்து முயன்று வந்துள்ளார்.

கணிப்பு
திருமணமானவர்களுக்கான திருமதி உலக அழகி போட்டி 1984ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி அமெரிக்காவின் லாக் வேகஸ் நகரில் நடைபெற்றது. இதில் சுமார் 63 நாடுகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கனடா நாட்டை சேர்ந்த பெண்மணி மூன்றாவது இடத்தையும், பாலினேசியா நாட்டை சேர்ந்த பெண் இரண்டாவது இடத்தையும் வென்றனர். இதனையடுத்து முதல் இடத்தை கைப்பற்றப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் மேலெழுந்தது. அமெரிக்கா அல்லது ஐரோப்பாவை சேர்ந்த பெண்தான் முதல் இடத்தை பிடிப்பார்கள் என்று ஏற்கெனவெ கணிக்கப்பட்டிருந்தது.

வாழ்த்து
ஆனால் இந்த கணிப்புகளை தவிடுபொடியாக்கி இந்தியாவை சேர்ந்த பெண்மணி சர்கம் கவுசல் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவரது தலையில் உலக அழகிக்கான கிரீடம் வைக்கப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு இந்தியாவின் அதிதி கோவித்ரிகர்தான் இந்த பட்டத்தை வென்ற கடைசி இந்திய பெண்மணியாவார். இதனையடுத்து 21 ஆண்டுகள் கழித்து மற்றொரு இந்திய பெண்மணி இப்பட்டத்தை வென்றிருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்கம் கவுசல் இப்பட்டத்தை வென்ற பின்னர் அதிதி கோவித்ரிகர் சர்கம் சவுசலுக்கு தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

வெற்றி
இந்த வெற்றி குறித்து, "21 ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு கிரீடம் கிடைத்திருக்கிறது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. லவ் யூ இந்தியா, லவ் யூ வோர்ல்ட்" என தனது மகிழ்ச்சியை சர்கம் கவுசல் சமூக வலைத்தளம் வழியாக வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட் தொடங்கி தென்னிந்திய திரையுலகம் வரை சர்கம் கவுசலை அணுக முயன்று வருகிறது. விரைவில் இவர் திரைப்படங்களில் நடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications