டிரம்ப் vs பெர்லின்.. கொரோனா மருந்துக்கு நடக்கும் சண்டை.. மொத்தமாக சொந்தம் கொண்டாட அமெரிக்கா பிளான்
கொரோனா வைரசுக்கு எதிரான மருந்து காரணமாக அமெரிக்கா ஜெர்மன் இடையில் கடுமையான சண்டை எழுந்துள்ளது.
நியூயார்க்: கொரோனா வைரசுக்கு எதிரான மருந்து காரணமாக அமெரிக்கா ஜெர்மன் இடையில் கடுமையான சண்டை எழுந்துள்ளது.
Recommended Video
அதிபர் டிரம்ப் ஜெர்மனியிடம் இருந்து கொரோனா மருந்தை பறிக்க முயல்கிறார். ஜெர்மன் விற்பனைக்கு கிடையாது. அமெரிக்காவின் கைகளுக்கு இந்த மருந்து சென்றால் அவர்கள் மட்டும்தான் இந்த மருந்தை பயன்படுத்துவார்கள். உலக நாடுகளை இதன் மூலம் அவர்கள் கட்டுப்படுத்துவார்கள்.
ஜெர்மனியர்கள் உழைப்பில் இந்த மருந்து உருவாகி உள்ளது. இது உலகில் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் அமெரிக்கா இதை மொத்தமாக கொண்டாட முயன்று வருகிறது, என்று ஜெர்மன் அரசு அமெரிக்கா மீது குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த சண்டை எப்படி உருவானது, என்ன காரணம் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
என்ன சண்டை
அமெரிக்காவுக்கும் ஜெர்மனுக்கும் இடையில் நடக்கும் இந்த சண்டைக்கு Curevac எனப்படும் ஜெர்மன் மருந்து ஆராய்ச்சி நிறுவனம்தான் காரணம். இது ஜெர்மனியை சேர்ந்த முன்னணி மருந்து ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். க்யூர்வேக் நிறுவனம்தான் கொரோனாவிற்கு எதிராக முதல் மருந்தை உருவாக்கி உள்ளது. இந்த நிறுவனம் இந்த மருந்தை தற்போது சோதனை செய்து வருகிறது. வரும் ஜூலை மாதம் இதை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர இந்த க்யூர்வேக் நிறுவனம் முயன்றுள்ளது.
ஆனால் அமெரிக்கா திட்டம்
இந்த க்யூர்வேக் நிறுவனத்தை மொத்தமாக வாங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையை அதிபர் டிரம்ப் இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கி நடத்தி வருகிறார். அமெரிக்கா இந்த நிறுவனத்தை வாங்க இரண்டு காரணங்கள் உள்ளது.
காரணம் 1 - இந்த நிறுவனத்தை வாங்கினால் கொரோனா மருந்து அமெரிக்காவின் வசம் வரும்.
காரணம் 2 - இந்த மருந்தை தங்கள் நாட்டிற்கு மட்டும் பயன்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
உண்மை
ஆம் அமெரிக்கா இந்த கொரோனா மருந்தை பிற நாட்டிற்கு கொடுக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். தங்களுக்கு மட்டுமே இதை பயன்படுத்திக்கொள்ளும் என்று ஜெர்மன் புகார் வைத்துள்ளது. ஜெர்மன் க்யூர்வேக் நிறுவனத்துடன் நடக்கும் பேரத்தில் டிரம்ப் இதை குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்கா இந்த மருந்தை வாங்கும். ஆனால் அதை யாருக்கும் விற்காமல் தங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் என்று டிரம்ப் குறிப்பிட்டதாக கூறுகிறார்கள்.
ஏன் இப்படி
இதற்கு காரணம் உள்ளது. இந்த மருந்தை உருவாக்க அதிகம் செலவாகும். கொஞ்சம் அளவு மருந்தை உருவாக்கவே பல நாட்கள் ஆகும். இதனால் இந்த மருந்தை வாங்கி அதை விற்பனை செய்யாமல் தங்கள் நாட்டின் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த அந்நாடு முடிவு செய்துள்ளது என்கிறார்கள். இதுதான் இந்த சண்டைக்கு காரணம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் டிரம்ப் இந்த நிறுவனத்தை வாங்க 25 பில்லியன் டாலர் தருவதாக கூறினாராம்.
எத்தனை கோடி
மருந்துக்கு மட்டும் 10 பில்லியன் டாலர் தருகிறோம். மொத்தம் நிறுவனத்தையே வாங்க 25 பில்லியன் தருகிறோம் என்று கூறி உள்ளார். டிரம்ப் இப்படி பேரம் பேசிய ஆதாரங்கள் ஜெர்மன் நாளிதழ்களில் வெளியாகி உள்ளது. இதனால் ஜெர்மன் அரசு அந்த தனியார் நிறுவனத்தை கையகப்படுத்த முடிவு செய்து உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.
பெர்லின்
அமெரிக்கா இதை வாங்கும் முன் அந்த நிறுவனத்தை கையகப்படுத்தி, மொத்தமாக மருந்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஜெர்மன் முடிவு செய்துள்ளது என்கிறார்கள். இதற்காக ஜெர்மனியில் தற்போது பெர்லின் vs டிரம்ப் டேக் வைரலாகி வருகிறது. உலகம் எல்லாம் நோயால் அச்சப்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் தற்போது அதை வைத்து கார்ப்ரேட் சண்டை ஏற்பட்டுள்ளது.