கொரோனா துயரம்:அமெரிக்காவில் 2-வது நாளாக 2,000 பேர் பலி;மொத்தம் 14,795 பேர் மரணம்- ஸ்பெயினைவிட அதிகம்
நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா தொற்று நோய் தாக்கி 2-வது நாளாக 2,000 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவால் அமெரிக்காவில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,795 ஆக அதிகரித்துள்ளது. இது ஸ்பெயின் நாட்டு உயிரிழப்பைவிட அதிகமாகும்..
Recommended Video
அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் 4,000 பேர் பலியாகி உள்ளனர். ஒரு நாளைக்கு 2,000 பேர் வீதம் கொரோனாவால் அமெரிக்காவில் உயிரிழந்து வருகின்றனர்.

அமெரிக்காவில் நேற்று மட்டும் 1,973 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு முந்தைய நாள் அமெரிக்காவில் 1939 பேர் உயிரிழந்திருந்தனர். அமெரிக்காவில் உயிரிழந்தோரில் 11 இந்தியர்களும் அடக்கம். மேலும் 16 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
அமெரிக்காவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் நியூயார்க் நகரில்தான் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவரை கொரோனாவால் நியூயார்க் நகரில் 6,000 பேர் பலியாகி இருக்கின்றனர். மொத்தம் 1,38,000 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூஜெர்சி மாகாணத்தில் கொரோனாவால் 48,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 1,500 பேர் பலியாகி உள்ளனர். நியூயார்க் நகரில் உயிரிழப்புகளின் வேகம் அதிகரித்து வருவது மருத்துவர்களை பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மருத்துவர்கள், இளைஞர்கள், நல்ல ஆரோக்கிய நிலையில் இருந்தவர்கள் கூட திடீரென கொரோனா தாக்குதலில் மரணமடைந்து விடுகின்றனர். தங்களால் அறையைவிட்டு வெளியே செல்வதற்கே பெரும் அச்சமாகவும் பீதியாகவும் இருக்கிறது என்கின்றனர்.












Click it and Unblock the Notifications