குண்டை தூக்கி போட்ட டிரம்ப்..அமெரிக்கா கனவு கனவாவே போச்சு! ’இந்த’ நாடுகளை சேர்ந்தவர்கள் போக முடியாது
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த புதிய உத்தரவால், அமெரிக்காவில் குடியேற விரும்பும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவின் படி, தெற்காசியா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 75 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் மக்களுக்கான குடியேற்ற விசா வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட உள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், சூடான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதால், அந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற காரணத்தை முன்வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், இந்த 75 நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு இனி குடியேற்ற விசா வழங்கப்படாது என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரி 21 முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

75 நாடுகள் விசா ரத்து
இந்த உத்தரவால் லத்தீன் அமெரிக்கா, கரீபியன் தீவுகள், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. கல்வி, வேலை, குடும்ப இணைப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டிருந்தவர்களுக்கு இந்த முடிவு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இந்த 75 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் உத்தரவு
இதனால், அமெரிக்காவில் குடியேற விரும்பும் இந்தியர்களுக்கு இந்த உத்தரவால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே இந்த உத்தரவு கடும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவு, குடியேற்ற கொள்கைகள் தொடர்பாக உலகளவில் மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், மனித உரிமை அமைப்புகளும் பல்வேறு நாடுகளும் இந்த உத்தரவை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளன.
டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து குடியேற்ற கொள்கையில் தீவிரம் காட்டி வருகிறார். அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை வெளிநாட்டினர், குறிப்பாக இந்தியர்கள் பறித்துக் கொள்வதாக குற்றம் சாட்டிய டொனால்ட் டிரம்ப் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தினார். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடிமைகள் போல போர் விமானங்களில் நாடு கடத்தப்பட்டனர். இது உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குடியேற்ற தடை
இதற்கிடையெ அமெரிக்காவில் ஐடி துறை உள்ளிட்ட அவற்றில் பணியாற்றுவதற்காக வழங்கப்பட்டு வந்த எச்1 பி விசா நடைமுறைகளிலும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். விசா கட்டணத்தை பல மடங்கு உயர்த்திய நிலையில் இது தொடர்பாக ஐடி நிறுவனங்கள், மத நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா விசா தடை
ரஷ்யாவுக்கு எதிராகவும் கெடுபிடி காட்டி வரும் ட்ரம்ப் அந்நாட்டுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தும் சட்ட மசோதாவை கொண்டுவர முயன்று வரும் நிலையில், அந்த வழக்கம் நீதிமன்றத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் அதிரடியாக லத்தின் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவை சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்கு குடியேறுவதைத் தடுக்கும் வகையில் புதிய குடியேற்ற விசா வழங்கும் நடைமுறையை டொனால்ட் டிரம்ப் அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications