ரூ.2 லட்சமாம் அப்பு.. தங்கம் வைத்த ஆப்பு.. வாயை பிளக்க வைக்கும் விலை.. வரலாற்றில் முதல்முறை
சென்னை: அமெரிக்க சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,60,164 ஆக உயர்ந்து உள்ளது. உலக வரலாற்றில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை இவ்வளவு அதிகம் உயர்வது இதுவே முதல்முறை.
1 அவுன்ஸ் என்பது 28 கிராம் ஆகும். அதாவது கிட்டத்தட்ட மூன்றரை பவுன் ஆகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கட்டணக் கொள்கைகளால் பொருளாதார நிலையின்மை உண்டாகி உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பான முதலீட்டை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் அமெரிக்காவில் தங்கத்தின் விலை ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக $3,000 (ரூ.2.6 லட்சம்) மதிப்பைத் தாண்டி அங்கே விற்பனை ஆகிறது.
ஸ்பாட் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $3,005.09 என்ற சாதனையை எட்டியது. அங்கே தங்கம், இந்த ஆண்டு இதுவரை 14 சதவீதம் உயர்ந்துள்ளது. டிரம்ப் ஜனவரியில் பதவியேற்றதிலிருந்து, வர்த்தக பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் தங்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Reciprocal tariffs என்று அழைக்கப்படும் பரஸ்பர கட்டணங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதன் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் வருடத்திற்கு சுமார் $7 பில்லியன் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருடா வருடம் இந்தியாவிற்கு இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
தங்கம் விலை
இந்தியாவின் பொருளாதாரம் தாண்டி தங்கம் விலையிலும் பாதிப்பு ஏற்படும். இந்தியா மீதான கட்டுப்பாடுகள் காரணமாக தங்கத்தின் விலை இனி வரும் நாட்களில் தீவிரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக தங்கத்தின் விலை தீவிரமாக உயரப் போகிறது.
தினமும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை உயருகிறது. டாலரின் மதிப்பு 0.2- 0.3 சதவிகிதம் வரை குறைகிறது. இப்போது வர்த்தக போர் தொடங்கினால் சர்வதேச அளவில் 1 அவுன்ஸ் தங்கம், அதாவது கிட்டத்தட்ட 4 பவுன் நகையின் விலை தற்போது இருக்கும் விலையை விட 17 ஆயிரம் ரூபாய் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் 4 ஆயிரம் ரூபாய் வரை இந்த வருடம் உயரும் வாய்ப்புகள் உள்ளன என்று கணிக்கப்பட்டு உள்ளது.
டாலர் மட்டுமன்றி ரூபாயின் மதிப்பும் குறையும். இதனால் மக்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கி செல்வார்கள். இதனால் தேவை அதிகம் இருக்கும். அந்த தேவை காரணமாக தங்கத்தின் விலை அதிகரிக்கும்.
அதிகரித்து வரும் பணவீக்க கவலைகள், வர்த்தக போர் பதட்டங்கள் மற்றும் மத்திய வங்கிகள் பல தங்கத்தை நோக்கி நகர்வது ஆகியவை காரணமாக தங்கத்தின் விலை உயரும் அவலம் ஏற்பட்டு உள்ளது. உலக நாடுகள் பல பணவீக்கம் காரணமாக டாலருக்கு பதில் தங்கத்தை குவிக்க தொடங்கி உள்ளது. டாலர் கையிருப்பிற்கு பதிலாக தங்கத்தை குவிக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக ஐரோப்பிய நாடுகள் வர்த்தக போர் பதற்றம் காரணமாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இதனால் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications