பாகிஸ்தானுடன் போர் பதற்றம்.. டிரம்பின் ஆஃபரை ஏற்க மறுத்த இந்தியா.. அமெரிக்காவுக்கு மேஜர் டிமாண்ட்
வாஷிங்டன்: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் என்பது உச்சமடைந்துள்ளது. இருநாடுகள் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் - இந்தியா இடையேயான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார் எனும் வகையில் பேசியிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆஃபரை நம் நாடு மறுத்துள்ளது. அதேவேளையில் அமெரிக்கா முதலில் இதை செய்ய வேண்டும் என்று முக்கிய டிமாண்ட்டை வைத்துள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
பஹல்காம் தாக்குலுக்கு பாகிஸ்தான் மீது நம் நாடு ஏவுகணை தாக்குதலை நடத்தியது. மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தான் நம் நாட்டின் 15 நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை தொடங்கியது.இந்த தாக்குதல் ரேடார் உள்பட வான்வெளி ஏவுகணை தடுப்பு சாதனங்கள் மூலம் நம் நாடு முறியடிக்கப்பட்டதோடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.

பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி உள்பட பல முக்கிய நகரங்களில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. அதன்பிறகு இன்று இரவு ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் உள்ள மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டது. இதனை நம் நாடு வெற்றிகரமாக தடுத்து முறியடித்தது.
இதையடுத்து பாகிஸ்தானுக்கு, நம் நாடு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், சியால்கோட், கராச்சி உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்து மோதல் வலுத்துள்ளது. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் அமைதி காத்தால் பிரச்சனை என்பது முடிவுக்கு வந்து இருக்கும். ஆனால் பாகிஸ்தான் நம்மை சீண்டி பார்க்கிறது. இதனால் உரிய முறையில் நம் நாடு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் தான் இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை பற்றி இருநாடுகள் பேசி தீர்த்து கொள்ள உதவி செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ல் தெரிவித்தார். அதாவது நேற்று முன்தினம் அதிகாலையில் நம் நாடு சார்பில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்கள் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் அழிக்கப்பட்டன. இதுபற்றி டொனால்ட் டிரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது டொனால்ட் டிரம்ப், ‛‛ இது மிகவும் மோசமானது. நான் இருநாடுகளுடன் பழகி வருகிறேன். எனக்கு இரண்டு நாடுகளும் நன்கு தெரியும். இந்த பிரச்சனையை அவர்களே சரிசெய்ய முடியும் என்று நம்புகிறேன். தாக்குதல்களை அவர்கள் நிறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் பழிக்கு பழியாக பதிலடி கொடுத்துள்ளனர். இருவருடனும் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது. ஏதாவது உதவி செய்ய முடிந்தால் நான் நிச்சயம் உதவி செய்வேன்'' என்றார்.
இதன்மூலம் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று மறைமுகமாக கூறியிருந்தார். இந்த ஆஃபரை நம் நாடு முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்காவுக்கான இந்தியா தூதர் வினய் மோகன் குவாத்ரா கூறுகையில், ‛‛அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு உண்மையில் நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம். அதேவேளையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, பாகிஸ்தானிடம் சொல்ல வேண்டும்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய வர வேண்டாம். மாறாக பயங்கரவாதிகளை ஆதரிக்க வேண்டாம் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
நம் நாட்டின் பிரச்சனை தொடர்பாக டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய வருவதை இந்தியா புறம்தள்ளுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இதுபோன்று நடந்துள்ளது. உதாரணமாக கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் நம் நாட்டின் ராணுவ வீரர்களுக்கும், சீனாவின் ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருநாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டது. அப்போது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப்தான் இருந்தார். அப்போது இந்தியா - சீனா இடையேயான பிரச்சனையை முடிக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்வதாக அறிவித்தார். அப்போதும் நம் நாடு டொனால்ட் டிரம்பின் ஆஃபரை நிராகரித்தது. அதேபோல் தான் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சனையில் டொனால்ட் டிரம்பை தலையிட வேண்டாம் என்று டீசென்ட்டாக இந்தியா கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications