அதிகாலையில் குலுங்கிய கலிபோர்னியா.. 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! 70,000 பேர் மின்சாரமின்றி தவிப்பு
நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பல இடிந்து விழுந்துள்ளன. தற்போது வரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
வடக்கு கலிபோர்னியாவில் அதாவது சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து சுமார் 345 கி.மீ தொலைவில் கடலில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் சுமார் 6.4 அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் சில சரிந்து விழுந்துள்ளன. இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
அமெரிக்காவை அதிர வைத்த நிலநடுக்கம்.. 55 ஆயிரம் கட்டடங்களில் மின்சாரம் துண்டிப்பு.. வருகிறதா சுனாமி?
நிலநடுக்கம்
ஆனால் 11 பேர் வரை காயமடைந்துள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பொதுவாக ரிக்டர் அளவு 5ஐ விட அதிகமாக நிலநடுக்கம் பதிவானாலே கடுமையான பாதிப்புகள் ஏற்படும். ஆனால் இந்த நிலநடுக்கத்தில் பெரிய பாதிப்புகள் பதிவாகவில்லையென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்கள் கூறியதாவது, "சில இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ஒரு சில கட்டிடங்கள் இடிந்து விழுந்து இருக்கிறது. நாங்கள் 11 பேர் வரை மீட்டோம். இவர்களுக்கு லேசான காயங்கள்தான் இருக்கிறது. மற்றபடி பயப்படும் அளவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஆனால் நிலநடுக்கம் காரணமாக மின் இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதுதான் மிகப்பெரிய தலைவலி.
மருத்துவமனைகள்
இந்த பகுதி மக்கள் தொகை குறைந்த பகுதி என்பதால் மீட்பு பணியில் எங்களுக்கு பெரிய பிரச்னை ஏதும் இல்லை. போதுமான அளவுக்கு மீட்புபடை வீரர்களும் இருக்கின்றனர்" என்று கூறியுள்ளார். அதேபோல இந்த நிலநடுக்க பாதிப்புக்கள் குறித்து கலிபோர்னியா கவர்னர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரையன் பெர்குசன் கூறுகையில், "ஹம்போல்ட் கவுண்டியில் சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் உள்ள இரண்டு மருத்துவமனைகள் ஜெனரேட்டர் வசதியுடன் இயங்கி வருகின்றன. இவ்வாறு நீண்ட நேரம் இயங்க முடியாது. எனவே உடனடியாக மின் இனைப்பு வழங்கப்பட்டாக வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மீட்பு பணி
அதேபோல இந்த பகுதியில் ஒரு பல்கலைக்கழகம், ஒரு துறைமுகத்தை தவிர பெரிய உள்கட்டமைப்புகள் ஏதும் இல்லாததால் மக்கள் தொகை இயல்பாகவே மற்ற இடங்களை காட்டிலும் இங்கு குறைவாகதான் இருக்கிறது என அதிகாரிகள் கூறுகின்றனர். உயிரிழப்புகளை பொறுத்த அளவில் சரியான எண்ணிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றாலும், 2 பேர் பலியாகி இருக்கலாம் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் நேற்று அதிகாலை சுமார் 2:34 மணியளவில் ஏற்பட்டதால் உடனடியாக மீட்பு பணியை துவங்குவது பெரும் சவாலாக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.
மின் இணைப்பு துண்டிப்பு
அரசு அதிகாரிகள் சேதமடைந்த கட்டிடங்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர். இப்பணி இன்னும் முழுமையடையவில்லை. கணக்கெடுப்பு முடிந்த பின்னர் சேதம் குறித்த முழு தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், "நிலநடுக்கம் காரணமாக மின்சார விநியோக கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே 70 ஆயிரம் பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். முக்கியமான இடங்களுக்கு மின்விநியோகம் அடுத்த 8-10 மணி நேரத்தில் வழங்கப்படும் என்றாலும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் விநியோகம் தாமதமடையும். தொடர் மழை காரணமாகதான் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது" என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இதற்கு முன்னர் அதாவது 1970ம் ஆண்டு 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது, அதேபோல கடந்த 2014ம் ஆண்டு 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.